இலங்கையின் கடன்நெருக்கடிக்கு உடனடி தீர்வினை காண நடவடிக்கை; ஜி-20 நாடுகளின் நிதிசார் மாநாட்டில் இணக்கம் !

இலங்கையின் கடன் நெருக்கடிநிலைக்கு உடனடியாகத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி செயற்படத்தயாராக இருப்பதாக ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பெங்களூர் நகரில் கடந்த 24 – 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவுதல், அதனை முன்னிறுத்தி கடன்வழங்குனர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டின் பெறுபேறு குறித்த ஆவணம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வாசிக்கப்பட்டது. அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குரிய தீர்வை அனைவரும் ஒருங்கிணைந்து பெற்றுக்கொடுப்பதற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குனர்கள் கூட்டாக இணைந்து பல்தரப்பு ஒருங்கிணைவை வலுப்படுத்துவது அவசியமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன் இரத்திற்கு அப்பால் கடன்நெருக்கடியைக் கையாள்வதற்கான பொதுச்செயற்திட்டத்தை உருவாக்கல்’ என்ற அடிப்படையின்கீழ் உருவாக்கப்பட்ட அனைத்துக் கடப்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று அந்தப் பொதுச்செயற்திட்டத்தை உரியவாறான காலப்பகுதியில், முன்னெதிர்வுகூறக்கூடிய அடிப்படையில், ஒருங்கிணைந்த முறையில் அமுல்படுத்தவேண்டும்’ என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தின் போதான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைக்கு மன்னிப்புச்சபை கோரிக்கை

இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்உயிரிழப்பு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள்இடம்பெறவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக பலத்தை கடைப்பிடிக்கும் போது நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் பொலிஸார் மேற்கொண்ட சட்டவிரோத கண்ணீர்புகை பிரயோகம் நீர்த்தாரை பிரயோகம் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி குறித்து பதிலளித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை தொடர்பிலான பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரிந்திரினி கொரியா இலங்கையில் பல மாத ஆர்ப்பாட்டங்களிற்கு பின்னரும் இலங்கை பொலிஸாருக்கு அமைதியான ஒன்றுகூடலிற்கான உரிமையை  உறுதி செய்யவேண்டிய அவர்களது கடமை குறித்தும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும்போது கட்டுப்பாட்டை பின்பற்றவேண்டியது குறித்தும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவேண்டியது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் நடவடிக்கைகள் கடந்த பல மாதங்களாக பல உயிர்களை பலியெடுத்துள்ளன இன்றும் அது இடம்பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள்அங்கிருந்து வெளியேற முடியாத தப்பமுடியாத நிலை காணப்படுவதையும்வீடியோ காண்பித்துள்ளது,அவ்வாறான சூழ்நிலையிலும் பொலிஸார் சர்வதேச மனிதஉரிமை சட்டம்  பலத்தை பயன்படுத்துவதற்கான தராதரங்கள்ஆகியவற்றை மீறி நீர்த்தாரை பிரயோகம் கண்ணீர்புகைபிரயோகம்ஆகியவற்றை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களிற்கு எதிரான பரந்துபட்ட வன்முறைகள்இல்லாத போது கண்மூடித்தனமான விளைவுகளை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் மன்னிப்புச்சபையின் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை தொடர்பிலான பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரிந்திரினி கொரியா தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் சூழமைவில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்உயிரிழப்பு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள்இடம்பெறவேண்டும் இவற்றிற்கு காரணமானவர்கள் நீதியின்முன்நிறுத்தப்படவேண்டும் எனவும்  சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜப்பானிய தூதரக அதிகாரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தார்

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரி ஹனா ,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டார் ஜெல்சின், உபதலைவர் இரா தர்ஷன், மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்பட்ட போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வடக்கு கிழக்கு தழுவிய திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட நிலஅபகரிப்பு , அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் , மகாவலி அபவிருத்தி திட்டமும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கமும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரவை பிரச்சினை,தமிழ் மாணவர் சமூகத்தின் மீதான அரச அடக்குமுறைகள் என பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற உத்தரவை மீறி மயிலத்தமடு,மாதவனை பகுதியில் காணி அபகரிப்பு – ஜனா எம்.பி

நீதிமன்ற உத்தரவினையும் மீறிய வகையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேய்ச்சல் தரை பகுதியாக காணப்படும் மயிலத்தமடு,மாதவனை ஆகிய பகுதிகளில் நிலைமைகளை கண்டறிவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பகுதிக்கு கள விஜயத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ஈபிஆர்எல்எப் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,புளோட்டின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.கேசவன் உட்பட பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

கடந்த சில தினங்களாக மயிலத்தமடு,மாதவனை பகுதியில் வேறு மாவட்டங்களிலிருந்துவருவோர் அத்துமீறிய பயிர்ச்செய்கையினை முன்னெடுத்துவரும் நிலையில் கடந்த சில தினங்களாக மேய்ச்சல் தரையில் உள்ள மாடுகள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுவருகின்றன.

கடந்த சில தினங்களில் ஒரு மாடு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்து மாடுகள் வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் இன்றைய தினம் ஒருவர் கரடியனாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டபோதிலும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகவும் கருணாகரம் எம்.பி.இதன்போது குற்றஞ்சாட்டினார்.

மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுத் தருகின்ற கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது – செல்வம் எம்.பி

மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா. அல்லது எதிர்த்து நிற்பார்களா  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தேர்தல் என்ற ஒன்று இல்லை என்ற ஜனாதிபதியின் கூற்று எந்தளவிற்கு சரியானதாக இருக்கும் என்று சொல்லத்தெரியவில்லை.

ஏனெனில்  தேர்தலிற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்போது ஐக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்களும்  பல இடங்களில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தார்கள்.

தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்கள், அப்படியிருக்கும் போது ஜனாதிபதியின் கூற்று வேடிக்கையானதாகவே இருக்கின்றது.

தேர்தலை நடாத்துவதில் நிதிப்பிரச்சனை இருக்குமானால் அதனை முன்னமே அறிவித்திருக்க வேண்டும்.இன்னும் சொற்ப நாட்களே இருக்கும் போது அவர் இவ்வாறு தெரிவிப்பதில் நியாயம் இருக்குமா என்று தெரியவில்லை.எனவே தேர்தலை நிறுத்துவது ஜனநாயக விரோதமானது என்பதே எனது கருத்து. உண்மையில் மாகாணசபை தேர்தலே முதலில் நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.

தென்னிலங்கை கட்சிகள் அதனை முதன்மையானதாக கருதவில்லை. எமது நிலங்களை பாதுகாப்பதற்கான அதிகாரம் 13 வது திருத்ததில் இருக்கின்றது. மாகாணசபை முறைமை கட்டாயம் வேண்டும் அதற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும்.

அதன் அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் போது முதலில் எதிர்ப்பவர்கள் பௌத்த பிக்குகளாகவே இருக்கின்றனர். இது ஒரு அர்த்தமில்லாத செயற்பாடு.

வடகிழக்கில் ஒரு நீதியான தீர்வை வழங்கமுடியாது என்ற செய்தியை பிக்குகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர். 13 வது திருத்தம் அமுல்படுத்தப்பட்டாலும்பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது என்று ஜனாதிபதி சொல்கிறார். அவரும் பௌத்த பிக்குகளின் சிந்தனையில் செயற்ப்படுவதுபோல தெரிகின்றது. எனினும் சிங்கள மக்கள் அதனை எதிர்க்கின்றார்கள் என்று அர்த்தமில்லை.

தமிழ்த்தரப்பிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி அதனை  எதிர்க்கின்றது. பௌத்தபிக்குகளுடன் இணைந்து அவர்கள் இதனை எதிர்ப்பது வேடிக்கையானதாக இருக்கின்றது. சமஸ்டியே வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதனை பெறுவதற்கான செயற்பாட்டை முன்வைக்கவில்லை. அதனை வென்றெடுப்பதற்கான திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை.

நான் அவர்களிடம் கேட்கின்றேன் மாகாணசபை முறைமையை எதிர்க்கும் நீங்கள் மாகாணசபை தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா. அல்லது எதிர்த்து நிற்பீர்களா. இந்த கேள்விக்கு பதில் வழங்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுநிற்கின்றேன்.

13 வது திருத்ததின் ஊடாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றது. இது அரசியல் சாசனத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துமாறே நாம் கேட்கின்றோம். எனவே இந்தவிடயத்தில் இந்தியா தலையிட வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். என்றார்.

சீனாவின் கடன் மறுசீரமைப்பு தீர்மானம் மார்ச் 31 இனுள் அறிவிக்கப்படும்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான ஒரு தீர்மானத்தை மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் அறிவிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்து உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இரண்டு வருட கால அவகாசம் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் கடன் நிலைபேறான தன்மையை அடைந்ததும் அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்திய துணைத்தூதுவரை சந்தித்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கபிரதிநிதிகள்

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை வழங்கியதோடு,  வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

குறிப்பாக இந்திய  கடற்றொழிலாளர்களின் நாட்டுப் படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கவுள்ளதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள் இந்திய  துணைதூதுவருக்கு தெரிவித்துள்ளனர்.

பேரரசுகள் தேடிவரும் ஒரு நாட்டைவிட்டு, மூளைசாலிகளின் வெளியேறம் தொடர்கிறது! நிலாந்தன்!

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும்,நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க பின்வருமாறு கூறியுள்ளார்…..“இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக, சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்களும் எண்ணிக்கையும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை.எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன”…

“அதேவேளை, கிராம மட்ட அரச வைத்தியசாலைகள் மற்றும் நகர்ப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் வெளியேற்றத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும்,கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றன இதுவரை மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை….மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.அதேவேளை,அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க கூறுகிறார்.

மேற்கண்ட இரண்டு செய்திகளும் நமக்கு எதை உணர்த்துகின்றன? படித்தவர்கள்,மூளைசாலிகள்,உள்நாட்டில் நன்றாக உழைக்கக் கூடியவர்கள் நாட்டை விட்டு வெளியேறத்தொடங்கி விட்டார்கள்.ஏனென்றால் முன்னரைப் போல அவர்களுக்கு உழைப்பு இல்லை. இது ஒரு காரணம்.பொருளாதார நெருக்கடியின் விளைவு இது.அதைவிட மேலதிகமான ஒரு காரணம், அதிகரித்த வரி.அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் உழைப்பவர்களிடம் அதிகரித்த வரியை அளவிடத் தொடங்கியுள்ளது.

அதனால் நாட்டை விட்டு மூளைசாலிகள் வெளியேறத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே தமிழர்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.முதலில் போர் ஒரு காரணம். இப்பொழுது பொருளாதார நெருக்கடி ஒரு காரணம். அதோடு சேர்த்து ஏற்கனவே புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்று விட்டார்கள் என்ற ஒரு முன்னுதாரணம் அவர்கள் முன் நிற்கிறது.அதுவும் 2009க்கு பின்னரான புலப்பெயர்ச்சிக்கு ஒரு காரணம்.

அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுபவர்களை வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.ஆனால் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான அவருடைய நடவடிக்கைகள், வெளியேறும் சிங்கள மக்களைத் தடுக்குமளவுக்கு இல்லை. மாறாக வெளியேற்றத்தை அது ஊக்குவிக்கிறது என்றும் சொல்லலாம்.

ஒற்றை யானையாக ராஜபக்சக்களின் நாடாளுமன்றத்துக்குள் வந்தபோது, தனது முதலாவது உரையிலேயே அவர் சொன்னார், பன்னாட்டு நாணய நிதியத்திடம் போங்கள் என்று.அன்றிலிருந்து இன்று வரையிலும் அதைத்தான் சொல்கிறார்.ஐ.எம்.எப்பின் உதவி கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்ற ஒரு மாயையை அவர் கட்டியெழுப்புகின்றார்.அவர் மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த ஒரு தலைவர். எனவே பன்நாட்டு நாணய நிதியத்திடம் போனால் அது ஒரு சர்வரோக நிவாரணமாக அமையும் என்று அவர் நம்புகிறாரோ இல்லையோ மக்களை நம்ப வைக்க முற்படுகிறார். அண்மையில் கண்டியில் அவர் ஆற்றிய உரையில் அதைக் காணலாம். பன்னாட்டு நாணய நிதியத்தின் 15 நிபந்தனைகளை நிறைவேற்றியது பற்றி அந்த உரையில் அவர் கூறுகிறார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அரசாங்கம் வரிகளை அதிகரித்தல் ,மானியங்களை வெட்டுதல்,அல்லது இல்லாமல் செய்தல்,,தனியார் மயப்படுத்தல் ,அதாவது,.நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்றல்,அரசுத்துறையில் ஆட்குறைப்புச் செய்தல்….போன்ற நிபந்தனைகளுக்கு உடன்படவேண்டும். கடந்த சில மாதங்களாக ரணில் விக்கிரமசிங்க அதைத்தான் செய்து வருகிறார்

அதன் விளைவாக படித்த நடுத்தர வர்க்கம் நாட்டை விட்டுக் கிளம்பத் தொடங்கிவிட்டது.ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியை என்னிடம் கேட்டார்… “இந்த மருத்துவர்களும் பொறியியலாளர்களும் சற் ஸ்கோரில் முன்னிலையில் நின்றபடியால் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார்கள். அதாவது இலவசக் கல்வியின் வரப்பிரசாதங்களை அனுபவித்து அதில் வெற்றி பெற்ற பின் இப்பொழுது நாட்டை விட்டு செல்கிறார்கள்.ஆனால் இவர்களோடு போட்டியிட்டு நிராகரிக்கப்பட்டவர்கள் நாட்டிலேயே நிற்கிறார்கள்” என்று. நான் அவரிடம் சொன்னேன் அதற்கு அவர்கள் முழுப் பொறுப்பு அல்ல. நமது கல்வி முறைதான் பொறுப்பு. இலவசக் கல்வி என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் நடைமுறையில் தேசியமட்டப் பரீட்சைகளை பொறுத்தவரை, அது முதலாவதாக போட்டிக்கல்வியாகவே காணப்படுகிறது.போட்டிப் பரீட்சைகளில் சித்தி பெறுவதற்காக பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி செல்கிறார்கள்.போட்டிக்கல்வியானது இலவசக் கல்வியின் மகத்துவங்களை பெருமளவுக்கு தோற்கடித்து விட்டது.

பரிட்சையில்,போட்டியில் வெல்ல வேண்டும்,அதிகளவு சற் ஸ்கோரைப் பெற வேண்டுமென்றால், இலவசக் கல்வியில் மட்டும் தங்கியிருக்க முடியாது. எனவே போட்டிப் பரீட்சையானது மாணவர்களை பந்தயக்குதிரைகளாக மாற்றுகிறது. பந்தயத்தில் முந்தியோடும் குதிரை சித்தி பெறுகின்றது.எனவே பந்தயக் குதிரையின் மனோநிலையை பாடசாலை பிள்ளைகள் மத்தியில் உருவாக்கி விட்டு,இலவசக் கல்வியின் மகத்துவங்களை பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது.பந்தயத்தில் முந்திய பிள்ளை மருத்துவராகவும் பொறியாளராகவும் வருகிறது.

போட்டி மனப்பான்மையானது உழைப்பையும் போட்டி ஆக்குகின்றது. போட்டி போட்டுக் கொண்டு உழைப்பவர்கள் அதிக வரி கட்ட வேண்டி வரும் போது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.அல்லது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கும் பொழுது அதிக வருமானத்தை வேண்டி நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.அவர்கள் பெற்ற கல்வியும் அவர்களுடைய சமூக அந்தஸ்தும் அவர்கள் இலகுவாக புலம்பெயர்வதற்குரிய தகமைகளாகக் காணப்படுகின்றன.எனவே இங்கு பிரச்சனை போட்டிக்கல்வி உருவாக்கிய பந்திய குதிரை மனோநிலை தான்.

இவ்வாறு படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் ஒருபுறம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் வெளியேறிவிட்டார்கள்.இப்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது.

ஆனால் இவ்வாறு படித்த நடுத்தர வர்க்கம் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்தான் நாட்டை நோக்கி அமெரிக்க போர் விமானங்கள் வருகை தந்தன.அதில் வந்தது யார்? ஏன் வந்தார்கள் போன்ற விவரங்கள் பெருமளவுக்கு ரகசியங்களாக பேணப்படுகின்றன.அமெரிக்கர்கள் மட்டும் வரவில்லை, சில மாதங்களுக்கு முன்பு இந்திய உளவுத்துறை பொறுப்பாளரும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகரும் ரகசியமாக வந்து போனதாக செய்திகள் வெளி வந்தன. படித்த நடுத்தர வர்க்கம் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை நோக்கி பேரரசுகள் வருகின்றன.ஏற்கனவே சீனா வந்துவிட்டது. அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்ற 90 ஆண்டுகளுக்கு குறையாமல் காத்திருக்க வேண்டும். கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனா கட்டிய பட்டணமும் நிரந்தரமானது.

அதாவது பேரரசுகள் இந்த நாட்டின் கேந்திர முக்கியத்துவம் கருதி இச்சிறிய நாட்டில் எங்கோ ஓரிடத்தில் தமது கால்களை ஊன்றிக்கொள்ள விளைகின்றன.ஆனால் பரிதாபத்துக்குரிய இந்த நாட்டிலிருந்து படித்தவர்களும் மூளை உழைப்பாளிகளுக்கு எப்படி வெளியேறுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்;கடவுச்சீட்டு அலுவலகத்தின் முன் வரிசைகளில் காத்து நிற்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி பேரணி மீதான தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு இன்று (26) பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி கேட் ஆகியவற்றிற்குள் நுழைய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை, கொம்பனி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்!

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால்  ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக, வெளியான செய்தி தொடர்பில்,  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலிலையே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் மேற்கொள்ள அனுமதிக்க  கூடாது என வலியுறுத்தியும் இதற்கு  நடவடிக்கை எடுக்க கோரியும் நேரில் சந்தித்து பேச வாய்ப்பு தருமாறு  ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோருவது.

ஐனாதிபதியிடம் இருந்து, கோரிக்கைக்கு  சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது.

அத்துடன் நாடாளுமன்றில் பேசிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையை பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது.

புனித ஸ்தலமான கச்சதீவினை கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேச்சுக்களை நடாத்த அனுமதிக்க கூடாது என யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஊடகங்கள் வாயிலாக கோருவது போன்ற முடிவுகள் இந்த கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளன.