யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி கருகல்

யாழ். மாவட்டத்தில் காலபோக நெற் பயிர் செய்கையில் பயிர்களில் பொட்டாசியம் பற்றாக்குறையால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார்.

யாழ். மாவட்டதில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணத்தில் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நெற்பயிர்கள் பொட்டாசிய குறைவால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, தைகடி, நவாலி, கோப்பாய், கரவெட்டி, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் போன்ற பல பிரதேசங்களிலும் நெற் பயிர்களில் பொட்டாசியக் குறைபாடு அவதானிக்கப்பட்டுள்ளது.

இக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக முதிர்ச்சி அடைந்த இலைகள் கடும் மஞ்சள் நிறமாவதோடு பொட்டாசிய பற்றாக்குறை அதிகமாகும் போது இலைகள் நுனியில் இருந்து அடிவரை செம் மஞ்சள் நிறத்திலிருந்து மஞ்சள், கபில நிறமாக மாறும்.

அதாவது இலையின் நுனிப்பகுதியில் தலை கீழ் “வி” (V) வடிவில் எரிவுகள் ஆரம்பிக்கும். இலை நுனியில் இருந்து இறக்கத் தொடங்கும்.

இதன் காரணமாக மட்டம் பெயர்தல் பாதிக்கப்படுவதுடன் தாவர வளர்ச்சி குன்றி பயிர்கள் கட்டையாக காணப்படும் நிலையில் நெல் மணிகள் பதர் ஆகும். இதனால் பாரியளவு உற்பத்தியிழப்பு ஏற்படும்.

விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நெற் செய்கையில் போசணை முகாமைத்துவத்தை அதிகரிக்க முடியும்.

பொட்டாசியம் அடங்கிய இரசாயனப் பசளைகளை சிபாரிசுக்கு அமைய இடல் , பொட்டாசியம் அடங்கிய திரவ பசளையினை சிபாரிசுக்கமைய விசிறல், மேலும் வைக்கோலில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுவதனால் அடுத்த போகத்தில் வைக்கோலினை இட்டு உழவு செய்தல், நெல் அடிக்கட்டைகளை (ஒட்டுக்கள்) அறுவடையின் பின்னர் உழுதுவிடல் கிளிசிரியா இலைகளை வயலில் தூவிவிடல் வேண்டும் இதன் மூலம் நைதரசன் மற்றும் பொட்டாசியம் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு பிரிட்டன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றது – தாரிக் அஹமட்

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பிரபுக்கள் சபை இலங்கை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது.

இதன்போது பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இலங்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு பதிலளித்துள்ளார். இவர் இலங்கை விவகாரத்தில் இந்தியா ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் கவனத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை மனிதாபிமான விவகாரங்களை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் – ஜனா எம்.பி

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டின் கல்வித்துறை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் பெருமைப்படக்கூடியதாக அமைந்திருந்தது. கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர்கள் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சியடைந்துள்ளோமா என வினவுகிறேன்.சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியல் காலத்தில் வலு வேறாக்கல் கொள்கை முறையாக கடைப்பிடிக்கப்படு வந்தது.72 ஆம் ஆண்டு குடியரசான பின்னர் கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் அரசாங்க கட்சிகளின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள்நுழையத் தொடங்கியது. அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறல் கல்வித் துறையில் நடக்கின்றது.

கல்வியமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும் தலைவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பின் அடிப்படையிலோ கல்வித் தகைமையின் அடிப்படையிலோ இன விகிதாசார அடிப்படையிலும் அல்ல. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். வட கிழக்கின் வாழ் கல்வித் திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. வட கிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தக் கூடியதாக மட்டுமே உள்ளது. பதவியிலுள்ளவர் அடுத்த பதவி உயர்வை எடுப்பதற்காக ஆளும் கட்சி அரசியல்வாதியின் காலில் விழுந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும். இப்படியான ஒரு கல்வியினால் எப்படி உயர்ந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கபடும் என்பதை வரவேற்கிறேன். தேசிய கல்வி நிறுவனம் 30 வருடங்களாக இயங்குகின்றது. தேசிய கல்வி நிறுவனத்தை வெளிநாடுகளில் காணப்படுவது போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பல்கலைக்கழகமாக இணைத்துக் கொள்ள வேண்டும். தேசிய கல்வி நிறுவனத்தில் பல கலாநிதிப் பட்டங்களை முடித்தவர்களும், பாரிய கட்டிடங்களையும் இதர வசதிகளையும் கொண்டிருப்பதால் இலகுவாக பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு பல்கலைக்கழமாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய கல்வி நிறுவகத்துக்கு 4000 மாணவர்களுக்குப் பதிலாக 8000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. ஒரு ஆசிரிய மாணவருக்கு 5000 ரூபா தான் ஒதுக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலை அதிகரிப்பில் குறித்த தொகை போதாது. அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். ஜெய்க்கா திட்டத்தினூடாக விசேட தேவையுடையவர்களுக்கான கல்வி பயிலுநர்களுக்கான விண்ணப்பத்தை கோரி இருந்தார்கள். கல்வி அமைச்சுக்கு 09 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாகாண கல்வித்திணைக்களுக்கு 22 ஆம் திகதி நவம்பர் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விண்ணப்ப முடிவுத் திகதி 23 ஆம் திகதி ஒரு மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 23 ஆம் திகதி காலை 10 மணிக்கே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது . 03 மணித்தியால காலப்பகுதியினுள் எப்படி விண்ணப்பிக்க முடியும்? இது முழு நாட்டிலும் நடைபெற்றுளது. இதனூடாக அவர்கள் ஜெய்க்காவின் குறித்த கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது என தெரிவித்தார்.

அரசியல் அத்துமீறல், செல்வாக்கின் காரணமாகவுமே நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது-  பா.  உ . ஜனா

ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்த எமது நாட்டின் கல்வித்துறை 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம் இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கினாலும் மோசமாக வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. இதுதான் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாகிய பின்னர் நாம், நமக்கு ஏற்படுத்திக் கொண்ட பெருமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்களில் திறமை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் என்ற நிதியமைச்சரின் முன்மொழிவையும், இந்த விடயத்தின் தார்ப்பரியத்தை ஜனாதிபதியவர்கள் தற்போது உணர்ந்துள்ளமைமையையும் நான் வரவேற்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவதாக இலங்கையில் உள்ள நூறு கல்வி வலயங்களுக்குள் தற்போது வெளியாகிய சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாவது இடத்தைப் பிடித்திருப்பதையொட்டி மட்டக்களப்பு வலயக் கல்;விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரிகள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர், மாணவர்கள் என அனைவருக்கும் எனது நன்றியையும், மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம். இந்த அமைச்சுக்கள் தொடர்பான விடயப் பரப்பு எமது நாட்டின் சகல துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தும், தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அமைச்சுக்களாகும். நாட்டின் நிகழ்கால நிலைமை மாத்திரமல்ல எதிர்கால நிலைமையினையும் வலுப்படுத்துகின்ற முக்கிய துறைசார் அமைச்சுக்கள் இவையாகும்.

எமது நாட்டின் கல்வித்துறை ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்தது. ஆனால், தமது வரவு செலவுத்திட்ட உரையில் நிதி அமைச்சரும் மேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்லுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா என வினவினார். நாங்கள் எங்கே தவறுவிட்டோம் என்று வினவினார். எங்களுக்குத் தவறிய இடம் எது எனவும் வினவினார்.

கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் திருப்தி அடையக்கூடிய வகையில் முன்னேறியுள்ளோமா? என நான் வினவுகின்றேன்.

சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியன் அந்தஸ்த்துக் காலத்தில் அரசாங்கத்தில் வலுவேறாக்கல் கொள்கை (Separation of power) முறையான அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதனால் அரச துறையில் Check and Balance நிலைமை பேணப்பட்டு வந்தது. ஆனால், 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும், அரசியல்வாதிகளின் செல்வாக்கும், அரசாங்கக் கட்சி எம்பிக்களின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள் நுழையத் தொடங்கியது. இதுதான் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாகிய பின்னர் நாம், நமக்கு ஏற்படுத்திக் கொண்ட பெருமை இதற்கு கல்வி அமைச்சும் விதிவிலக்கல்ல.

இன்று, எமது கல்வித்துறை நாம் பெருமைப்படத்தக்க நிலையில் இருக்கின்றதா? நான் இதற்காக கல்வி அமைச்சரை விரல் நீட்டி குற்றம் சாட்டவில்லை. அவர் திறமையானவர். அவரது திறமையில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால், கல்வித் துறையில் நடப்பது என்ன? அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கின் காரணமாகவும் எமது நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மறையாக விமர்சிக்கின்றது. நேர்மறையாக சிந்திக்கிறது என்று எம்மீது இலகுவாக குற்றஞ்சாட்டி நீங்கள் தப்பிவிடுவீர்கள். ஆனால், யதார்த்தம் அதுவல்ல. நாங்கள் யதார்த்தத்தைக் கண்டு யதார்த்தத்தை உணர்ந்து யதார்த்தத்தை உரைக்கின்றோம். உண்மை சிலவேளை உங்களுக்கு கசக்கத்தான் செய்யும். ஆனால், இதுவே கல்வித்துறையின் இன்றைய யதார்த்தம்.

கல்வி அமைச்சின் கீழ் இருக்கின்ற திணைக்களங்களையும் நிறுவனங்களையும் நோக்கினால் எமது நாட்டின் அபிவிருத்திக்கு இவை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்வீர்கள். ஆனால். இந்த திணைக்களங்களிலும், நிறுவனங்களிலும் தலைமைகள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பு அடிப்படையிலோ, கல்வித் தகமை அடிப்படையிலோ இல்லை. இன விகிதாசார அடிப்படையிலும் இல்லை. அந்த பிரதேசத்தின், அந்த தேர்தல் தொகுதியின், அந்த மாவட்டத்தின், அந்த மாகாணத்தின் அரசாங்கம் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ, அவரவர் தேவைக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். இன்னும் கூறப்போனால், பாடசாலை அதிபர் இருந்து ஆசிரிய ஆலோசகர் ஈறாக கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் வரை அரசியல் ரீதியான நியமனங்களாகவே இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாவிடினும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இன்று வடகிழக்கில் கல்வி திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. இவை வடகிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் உள்ளதே ஒழிய மாணவர் நலனோ, கல்வி அபிவிருத்தி நலனோ இல்லை. பதவியிலிருப்பவர் அடுத்த பதவியுயர்வினை எடுப்பதற்காக அந்த அரசியல்வாதியின் காலடியில் விழும் நிலையில் இருந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும்? எப்படியொரு கல்வியினால் உயர்ந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும்? உண்மையிலேயே எனது மாகாணத்தில் கல்வித் துறை சார் நிருவாகம் தொடர்பாக நடைபெறுகின்ற சீர்கேடுகளை இந்த உயரிய சபையில் எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பமாக இதனை நான் கருதுகின்றேன். இது எவர் மீதும் கொண்ட காழ்ப்புணர்ச்சியோ, தனிப்பட்ட குரோதமோ அல்ல. எமது மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு இருக்கின்ற தார்மீகப் பொறுப்பின் வெளிப்பாடே இதுவாகும்.

அரச பல்கலைக்கழகங்களில் திறமை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் என்ற நிதியமைச்சரின் முன்மொழிவை நான் வரவேற்கின்றேன். ஏனெனில், இந்த நாடு இனப்பிரச்சினை என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான முதல் காரணியே அரச பல்கலைக்கழக அனுமதியில் திறமையைப் புறக்கணித்து மாவட்ட விகிதாசாரக் கோட்டாவினைக் கொண்டு வந்ததேயாகும். இதனை, இதன் உண்மைத் தன்மையின் தார்ப்பரியத்தை எமது ஜனாதிபதியவர்கள் உணர்ந்துள்ளமைமையை வரவேற்கின்றேன்.

இலங்கைளயில் தேசிய கல்வி நிறுவகம் கடந்த முப்பது வருடங்களாக இயங்குகின்றது. 1985ம் ஆண்டு 25ம் இலக்க சட்டத்தின்படி இலங்கையிலுள்ள ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவும் அவர்களுக்குத் தொழில் அங்கீகரச் சான்றிதழ்களை வழங்கவும் தேசிய கல்வி நிறுவகத்திற்குத் தான் அதிகாரம் இருக்கின்றது. தற்போது அத்தேசிய கல்வி நிறுவகங்களை பல்கலைக்கழகம் ஆக்குவதற்கான யோசனை எழுந்துள்ளது. இந்தியா, மலேசியா, அமெரிக்காவில் இருப்பதைப் போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு தேசிய கல்விப் பல்கலைக்கழகமாக மாற்றலாம். இங்கு 24 கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்தவர்களும், பாரிய கட்டிட மற்றும் இதர வசதிகளும் இருப்பதனால் இலகுவாக இதனை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

அதேபோல் பத்தொன்பது தேசிய கல்விக் கல்லூரிகளையும் இணைத்து அதனையும் உங்கள் யோசனையின் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் கீழ் ஒரு பல்கலைக்கழகமாக மாற்றலாம். ஆனால் 2019, 2020 களிலே தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குத் தெரிவான மாணவர்களிலும் பார்க்க இவ்வருடம் இரட்டிப்பான மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிய வருகின்றது. ஒரு ஆசிரிய மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு தற்போது ஐயாயிரம் ரூபாய் தான் ஒதுக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதாரச் சூழலிலே ஒருநாளைக்கு நூற்றுஅறுபது ரூபாய்களே கிடைக்கின்றன. இதிலேயே அவர்களின் ஒருநாளைக்கான மூன்றுவேளை சாப்பாடு உட்பட இதர செலவுகளும் அடங்குகின்றன. எனவே இந்த ஐயாயிரம் ரூபா விடயத்தில் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தி அந்த ஆசிரியர்கள் போசாக்கான ஆசிரியர்களாக வெளிவந்து கற்பிப்பதற்காக ஆவன செய்ய வேண்டும்.

அது மட்டுமலல்லாமல், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஜெய்கா திட்டம் ஊடாக ஜப்பானில் விசேட கல்வியினைப் பயிற்றுவிப்பதற்காக விணப்பம் கோரியிருந்தார்கள். அந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்கம் 2022.11.09ம் திகதியிட்டு கல்வி அமைச்சிற்கு அந்தக் கடிதத்தை அனுப்;பியிருந்தார்கள். ஆனால் கல்வி அமைச்சு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு 2022.11.21ம் திகதியே அதற்குரிய கடிதத்தை அனுப்பியிருக்கின்றார்கள். அந்தக் கடிதங்கள் அந்தந்த வலயங்களுக்கு 22ம் திகதியே கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த விண்ணப்ப முடிவுத்திகதியோ 23ம் திகதியுடன் முடிவடைகின்றது. இவ்;வாறிருக்க சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்த விடயம் 23ம் திகதி காலை 10.00 மணிக்கே அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது பகல் 01.00 மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்று. இவ்வாறு மூன்று மணி நேர கால அவகாசத்தில் விண்ணப்பிக்கச் சொன்னால் அவர்கள் தங்களது விடயங்களை எவ்வாறு தேடி எடுப்பார்கள். இது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாமல் இந்த நாட்டிலிருந்து எவரும் ஜெய்கா திட்டத்தின் விசேட பயிற்சிக்கு செல்ல முடியாமல் போயுள்ளமை மிகவும் கவலையான விடயம் என்று தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவில் இருந்து இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குடியுரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளுக்கான கட்டணம் 1,150 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மேலும் சில பிரிவுகளுக்கான விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விட்டுக்கொடுப்பு இல்லாது தீர்வில்லை

–  எம்.எஸ்.எம். ஐயூப்

 

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவைக் கூட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பெரும்பாலும் அப்போதைய இராஜாங்க அமைச்சராக (தகவல் அமைச்சராக) இருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் தலைமையிலேயே நடைபெற்றறது.

அல்விஸ், 1950களில் பிரதமராக இருந்த ஜோன் கொத்தலாவலவின் செயலாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றியவர். இந்த மாநாடுகளின் போது அவர் மிகவும் சுவாரசியமான கதைகளைச் சொல்வார். அவ்வாறான ஒரு மாநாட்டின் இறுதியில் அவர் off the record (வெளியிட வேண்டாம்) என்று கூறி ஒரு கதையைக் கூறினார். இது தான் அந்தக் கதை.

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை 1949 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்டு இருந்த நிலையில் ஜோன் கொத்தலாவல அம்மக்களின் பிரச்சினையைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுடெல்லிக்குச் சென்றிருந்தார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் அவர் பேச்சுவார்ததை நடத்தும் போது ஒரு கட்டத்தில் நேரு இவ்வாறு கூறினார்.

‘மிஸ்டர் கொத்தலாவல, உங்கள் நாடு சிறியதாக இருந்தாலும் இந்தப் பத்து இலட்சம் மக்களை உள்வாங்கிக் கொள்வது உங்கள் நாட்டுக்கு பெரிய விடயமல்ல. ஆனால், நீங்கள் அதனைச் செய்யப் போனால் உங்கள் எதிர்க் கட்சிக்காரர்கள் உங்களை அரசியலில் இருந்தே விரட்டிவிடுவார்கள். இவர்களை உள்வாங்கிக் கொள்வது இந்தியாவுக்கு அதை விட எவ்வளவோ சிறிய விடயம். ஆனால், எங்கள் எதிர்க் கட்சிகளும் அதற்கு இடம் கொடா. எனவே, இதனை நாம் இரு நாடுகளினது அதிகாரிகளிடம் ஒப்படைத்தால் அவர்கள் உலக அழிவு வரை அதைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எங்களுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது.’

அன்று நேரு கூறியதைப் போல் அதிகாரிகளிடம் ஒப்படைக்காவிட்டாலும் இலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்ததைகளும் உலக அழிவு வரை நடைபெறும் போல் தான் தெரிகிறது.

பிரஜா உரிமை தொடர்டபான பேச்சுவார்ததைகள், 50:50 கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை, பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்தை, இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான சிறிமா-சாஸ்திரி பேச்சுவார்த்தை, அதே பிரச்சினை தொடர்பான சிறிமா-இந்திரா பேச்சுவார்ததை, டட்லி-செல்வா ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை, ஜே.ஆரின் வட்ட மேசை மாநாடு, அரசியல் கட்சி மாநாடு (PPC), இந்திய அதிகாரிகளான கோபாலசுவாமி பார்த்தசாரதி மற்றும் ரொமேஷ் பண்டாரி ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள், திம்புப் பேச்சுவார்த்தைகள், இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள், ரணசிங்க பிரேமதாசவின் சர்வ கட்சி மாநாடு, புலிகளுடனும் தமிழ் கட்சிகளுடனும் பல அரசாங்கங்கள் நடத்திய பேச்சுவார்ததைகள் போன்ற பல பேச்சுவார்ததைகள் 1940களில் இருந்து இன்று வரை இடம்பெற்றுள்ளன.

அதற்குப் புறம்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர்கள் இடையே எத்தனையோ சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ முறை இரு சாராரும் உடன்பாடுகளுக்கும் வந்துள்ளனர். ஆனால், இன்னமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதா இல்லையா என்று வாதிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

பொதுவாக இனப் பிரச்சினை இன்னமும் ஏறத்தாழ தொடங்கிய இடத்திலேயே இருக்கிறது. தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று சிங்கள் மக்கள் இன்னமும் கேட்கிறார்கள். சிங்களத் தலைவர்கள் சமஷ்டி முறையை பிரேரித்த போது தமிழர்கள் எதிர்த்தார்கள். இப்போது தமிழர்கள் அதனைக் கேட்கும் போது சிங்கள மக்கள் அதனை எதிர்க்கிறார்கள். 40 ஆண்டுகளாக அதிகார பரவலாக்கலைப் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றும் மாகாண சபைகளை அறிமுகப்படுத்தி சுமார் 35 ஆண்டுகள் கழிந்தும் அதிகாரப் பரவலாக்கலால் நாடு பிரிந்துவிடும் என்று சிங்கள் அரசியல்வாதிகள் இன்னமும் வாதிடுகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினையைப் பற்றி பேச்சுhவர்த்தை நடத்த அரசியல் கட்சிகளுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுத்தார். பாராளுமன்றத்தில் வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் போது அந்த அழைப்பை விடுத்த அவர் அதிகார பரவலாக்கலை விரும்புகிறீர்களா என ஒவ்வொரு கட்சித் தலைவர்களிடமும் கேட்டார்.

பேச்சுவார்த்தையே தீர்வுக்காகன ஒரே வழி என்பதால் நேர்மையானதோ இல்லையோ ஜனாதிபதியின் இந்த அழைப்பு பாராட்டுக்குறியதாகும். ஆனால், சுமார் 75 ஆண்டுகளாக நடைபெறும் இந்தப் பேச்சுவார்ததைகளைப் பற்றிய அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்நாட்டு மக்களில் குறைந்தபட்சம் ஒரு சத வீதத்தினராவது ஜனாதிபதி நடத்தப் போகும் பேச்சுவார்தைகள் வெற்றியளிக்கும் என்று நம்புகிறார்களா என்பது சந்தேகமே.

அது அவர் மீதான நம்பிக்கையின்மை மட்டுமல்ல. ஓரளவுக்கு அதுவும் ஒரு காரணம் தான். அதேவேளை அது பொதுவாக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் திறந்த மனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்பதைப் பற்றிய நம்பிக்கையின்மையேயாகும்.

தமிழ் தலைவர்கள் அதிகார பரவலாக்கல் வேண்டும் என்கிறார்கள. சில சிங்களத் தலைவரகள் அதிகார பரவலாக்கலால் நாடு பிளவுபடும் என்று கூறுகிறார்கள். ஆனால் 34 ஆண்டுகளாக மாகாண சபைகளுக்கு அரசியல் அதிகாரம் பரவலாக்கப்பட்டுத் தான் இருக்கிறது. அவ்வாறு இருந்தும் எந்தவொரு சாராரும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.

தமிழ் தலைவர்கள் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே வேண்டும் என்கிறார்கள். அதற்குக் குறைந்த ஒரு தீர்வை எந்தவொரு தமிழ் கட்சியாவது ஏற்றுக் கொண்டால் ஏனைய தமிழ் கட்சிகள் அக்கட்சியின் தலைவர்களை துரோகிகள் என்பார்கள். அதேபோல் சிங்களத் தலைவர் ஒருவர் சமஷ்டி முறையை ஏற்றுக் கொண்டால் இனவாத சிங்களக் கட்சிகள் அவரை துரோகி என்பார்கள். துரோகிப் பட்டம் அடுத்த தேர்தலில் தம்மை பாதிக்கும் என்பதால எவரும் அதனை ஏற்கத் தயாராக இல்லை. இவ்வாறு எந்தவொரு தரப்பினரும் இறங்கி வரத் தயாராக இல்லாவிட்டால் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது எவ்வாறு?

2015 ஆம் ஆண்டு பதவிக்க வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசியலமைப்புச் சபையொன்றை நிறுவியது. அச்சபையால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதில் தமிழர்கள் வெறுக்கும் ஒற்றை ஆட்சி என்ற பதம் தமிழில் இருக்கவில்லை. சிங்கள மொழியில் இருந்தது. சிங்கள தேசியவாதிகள் வெறுக்கும் சமஷ்டி என்ற பதம் எந்த மொழியிலும் இருக்கவும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதில் ‘ஒருமித்த நாடு’ என்ற எண்ணக்கருவே தமிழ் மொழியில் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. ஆனால் அது சமஷ்டிக் கோரிக்கையை நிராகரிப்பதாகும் என்றும் சிங்கள பௌத்த ஆதிக்கத்தை அங்கீகரிப்பதாகவும் அப்போதைய வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கூறினார்.

அதேவேளை அந்த அறிக்கையானது தந்திரமாக சமஷ்டி முறையை திணிக்கும் முயற்சி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிங்கள் இனவாதிகள் கூறினர். இந்த இழுபறியோடு வேறு பல அரசியல் பிரச்சினைகள் உருவாகி அந்த அரசியலமைப்பு தயாரிப்பு முயற்சி கைவிடப்பட்டது. சண்டையிட்டோர் அந்தத் திட்டத்தின் பெயரை வைத்து தான் சண்டையிட்டார்களேயொழிய அதன் உள்ளடக்கத்தை எவரும் எதிர்க்கவில்லை.

இது ஒற்றையாட்சி என்ற பதத்தை கைவிட சிங்களத் தலைவர்களுக்கும் சமஷ்டி என்பதைக் கைவிட தமிழ் தலைவர்களுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. எனினும் ஜனாதிபதி சந்திரிகா 1995 ஆம் ஆண்டு முன்வைத்து ‘பக்கேஜ்’ என்ற அக்காலத்தில் சகலராலும் அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் இலங்கை ஒரு பிரந்தியங்களின் ஒன்றியம் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒற்றையாட்சி என்ற பதம் அதில் இருக்கவில்லை. அதுவே பொருத்தமான தீர்வு என்று சில தமிழ் தலைவர்களும் கடந்த வாரம் கூறியிருந்தனர்.

அத்திட்டத்தை ஏற்றிருக்கலாம் என்று புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் 2003 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் புலிகளின் புதிய நீதிமன்றத் தொகுதியை திறந்து வைக்கும் வைபவத்தின் போது கூறினார். ஆனால் ஜீ.எல். பீரிஸூடன் சேர்ந்து அந்தத் தீர்வுத் திட்டத்தை தயாரித்த நீலன் திருச்செல்வத்தை புலிகளே 1999 ஆம் ஆண்டு தற்கொலை குண்டுதாரி ஒருவர் மூலம் கொன்றனர்.

ஒற்றையாட்சிக்குப் பதிலாக சமஷ்டி முறையின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்று புலிகளும் ரணிலின் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஒஸ்லோ நகரில் வைத்து உடன்பாட்டுக்கு வந்தனர். ஆனால் புலிகள் அந்த இணக்கப்பாட்டை உதறித் தள்ளிவிட்டு 2005 ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் போரை ஆரம்பித்தனர்.

இந்த ஒற்றையாட்சி – சமஷ்டி சர்ச்சை விடயத்தில் போலவே வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்திலும் சம்பந்தப்பட்ட எவரும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. அவ்வாறாயின் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தி எதனை சாதிக்கப் போகிறார்கள்? நியாயத்தின் அடிப்படையில் விட்டுக்கொடுக்க சகல தரப்பினரும் தயாராக இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தையும் சிரமத்தையும் வீணடித்து போதாதக்குறைக்கு இன உணர்வுகளையும் தூண்டுவிடுவதை விட சும்மா இருப்பதே மேல் என்றும் வாதிடலாம். எனினும் பேச்சுவார்த்தையைத் தவிர் தீர்வுக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

ரணில் விரித்திருக்கும் புதிய வலை


புருஜோத்தமன் தங்கமயிலால் எழுதப்பட்டு டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த நாட்களில் வெளியிட்ட இருவேறு கருத்துக்கள் தமிழ் மக்களை எரிச்சலடைய வைத்திருக்கின்றன. முதலாவது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு தமிழ்க் கட்சிகள் முன் நிபந்தனைகள் ஏதுமின்றி வரவேண்டும் என்பது. இரண்டாவது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் முன்வைக்கப்பட்டு தோல்வியடைந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீள கொண்டுவருவது தொடர்பிலானது.

சுதந்திர இலங்கையில் தமிழ்த் தரப்புக்களுக்கும் தென் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடையில் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை பண்டா -செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் தொடங்கி, நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காண்பது வரையான பேச்சுக்கள் வரை நீண்டிக்கின்றன. பண்டா – செல்வாவுக்கு இடையிலான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால், நாடு நீண்ட நெடிய ஆயுத மோதலைக் கண்டிருக்காது. இன முரண்பாடுகள் பாரியளவில் எழுந்தும் இருக்காது. ஆனால், நாட்டின் நலன், ஒருமைப்பாடு, இன நல்லிணக்கம் கடந்து பௌத்த சிங்கள அடிப்படைவாதத்தின் மேலாண்மையும் அதன் வழியான ஆட்சியமைப்பும் பிரதான இடத்தில் இருப்பதாலேயே நாடு படுபாதாளத்துக்குள் வீழ்ந்தது. பௌத்த சிங்கள மேலாதிக்கத்தினால் தென் இலங்கையின் சிங்கள மக்கள் எதுவித நன்மையையும் அடைந்துவிடவில்லை. மாறாக, ஆளும் வர்க்கமும், அவர்களுக்கு இணக்கமான தரப்புக்களுமே ஆதாயங்களை அடைந்திருக்கின்றன.

அப்படியான நிலையில், நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை ஆளும் வர்க்கமும், பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகளும் தொடர்ச்சியாக தவிர்த்தே வந்திருக்கின்றன. நாட்டில் நீடிக்கும் அரசியல் பிரச்சினையும் அதனால் மேலும் மோசமடையும் இன முரண்பாடுகளுமே ஆட்சியைப் பிடிப்பதற்கும் தக்க வைப்பதற்குமான பிரதான சூத்திரமாக தென் இலங்கையில் பேணப்படுகின்றது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளினால் அரசியல் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு ஆளும் தரப்பு வந்தால், அதனை எதிர்க்கட்சி பலமாக எதிர்க்கும். அந்த எதிர்க்கட்சியே, அடுத்து ஆளும்தரப்பாக வந்ததும் பேச்சுவார்த்தை நடத்தினால், முன்னைய ஆளும்கட்சி அதனை எதிர்க்கும். இதுதான், தென் இலங்கை ஆட்சியாளர்களின் தொடர் செயற்பாடு.

பண்டா – செல்வா ஒப்பந்தம், பௌத்த தேரர்களின் போராட்டத்தினால் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் கிழித்தெறியப்பட்டது. அந்த ஒப்பந்தம் சிலவேளை நடைமுறைக்கு வந்திருந்தால், சிலவேளை, இலங்கை முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும். இலட்சக்கணக்கான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டிருக்கும். பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தல்கள் காணாமல் போதால்களினால் இல்லாமல் ஆகியிருக்க மாட்டார்கள். ஆனால், நடந்ததோ வேறு. சிங்கள மட்டும் சட்டத்தினை முன்னிறுத்தி இனவாத அரசியலை ஆட்சிபீடம் ஏறுவதற்காக முன்னிறுத்திய பண்டாரநாயக்க, அதனை பேரழிவின் பெரும் புள்ளியாக வைத்துச் சென்றார்.

பிரித்தானியாவிடம் இருந்து ஆட்சியுரிமையை தென் இலங்கையின் பெரும் அரசியல் வர்த்தக குடும்பங்கள் பெற்ற போது, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் தென் இலங்கையின் சாதாரண சிங்கள மக்களும் எதுவித நம்பிக்கைகளும் இன்றியே இருந்தார்கள். அந்த நம்பிக்கையீனம் இன்று வரையில் மாறவில்லை. மாறாக இனவாத, வர்க்க முரண்பாடுகள் தென் இலங்கை பூராவும் விதைக்கப்பட்டன. குறிப்பாக, மகா வம்ச மனநிலையோடு, பௌத்த அடிப்படைவாத சிந்தனைகளை முன்னிறுத்தினார்கள்.

அப்படி முன்னிறுத்தியவர்களில் பெரும்பாலானோர், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில், பிரித்தானியரின் மதத்தையும், கல்வியையும் பெற்றவர்கள். அவர்களுக்கு பௌத்தம் குறித்த எந்தவித கோட்பாட்டு விளங்கங்களோ, அறிவோ இல்லை. மாறாக, சுதந்திர இலங்கையில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பௌத்த அடிப்படைவாதத்தை முன்னிறுத்துவதே இலகுவான வழி என்ற புள்ளியில் அவர்கள் அனைவரும் அதனை தெரிவு செய்தார்கள்.

சேனநாயக்க குடும்பம், விஜயவர்த்தன குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் என்று இலங்கை ஆட்சி செய்து யார் யாரெல்லாம் சீரழித்தார்களோ, அவர்கள் எல்லாருக்கும் அது பொருந்தும்.

சிங்கள மட்டும் சட்டமும், பௌத்தத்துக்கு முதலிடம் எனும் நிலையும் தென் இலங்கை ஆட்சியாளர்களினால் நாட்டை சீரழிப்பதற்காக வைக்கப்பட்ட பொறிகள். சுதந்திரத்துக்குப் பின்னரான 75 ஆண்டுகளில் இந்த இரு சட்டங்களினாலும் தென் இலங்கையின் சாதாரண மக்கள் கூட எந்தவித நன்மையையும் அடையவில்லை. மாறாக, இன்றைக்கு தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான உணர்வோடு அலைகிறார்கள். இப்போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு மாதக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்கின்றது. வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கடவுச்சீட்டுக்கான வரிசை, காத்திருப்பு காணப்படுவதாக குடிவரவு -குடியகல்வு திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

அப்படியானால், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் தயாராக இருக்கிறார்கள். அதில், பெரும்பான்மையான சாதாரண மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வசதி வாய்ப்பின்றி இருக்கிறார்கள். இல்லையென்றால், ஒருசில மாதங்களிலேயே நாட்டிலிருந்து கணிசமானவர்கள் வெளியேறிவிடுவார்கள். அதுதான் இன்றைய நிலை. இதுதான் பெளத்த சிங்கள அடிப்படைவாதமும், அதனைமுன்னிறுத்தி விட்ட ஆட்சிமுறையும் செய்த சாதனைகள்.

நிலைமை அப்படியிருக்க, தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் இன்றி வர வேண்டும் என்று ரணில் கூறுவதை எவ்வாறு காண வேண்டும். தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனைகள், பௌத்த சிங்கள மேலாதிக்க நிறுவனங்களும், கட்டமைப்பும் வடக்கு கிழக்கில் புரியும் அத்துமீறல்கள் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோருவதாகும். அதனை, அரச இயந்திரம் நினைத்தால் உடனயே நிறுத்திவிடலாம்.

ஏனெனில், அந்த ஆக்கிரமிப்புக்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை. அப்படியான நிலையில், அதனை நிறுத்தக் கோருவது முன் நிபந்தனையாக கொள்ள வேண்டியதே இல்லை. அத்தோடு, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பகுதியில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை கோருவது எவ்வாறு முன் நிபந்தனையாகலாம் என்று தெரியவில்லை. தமிழ் மக்களின் தொடர் கோரிக்கையே, பாரம்பரிய நிலப்பகுதியில், மேலாதிக்கம், ஆக்கிரமிப்புக்கள் அற்ற, ஒருங்கிணைந்த நாட்டுக்குள்ளான ஆட்சி முறையே, அதனையே, சமஷ்டி என்கிற சொல்லின் கீழ் வரையறுக்கிறார்கள். பேச்சுவார்த்தை மேசையில் சமஷ்டி அதிகார பகிர்வு குறித்து பேச வேண்டும் என்று கோருவதை முன் நிபந்தனையாக ரணில் காட்டுவது, மிக மோசமான அணுகுமுறை.

அத்தோடு, ஜே.ஆர். காலத்து மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்கிற முறையினூடாக நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்று அவர் பேச ஆரம்பித்திருப்பது சதி நோக்கிலானது. அது, இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் பிரகாரம் தோற்றம்பெற்ற மாகாண சபைகளையும் இல்லாமற் செய்யும் தந்திரத்துடனானது. அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை இல்லாமற் செய்ய வேண்டும் என்பது, தென் இலங்கையின் இனவாத மதவாத சக்திகளின் ஒரே நிலைப்பாடு. அப்படியான நிலையில், அதனை நிறைவேற்றுவதற்காக மாவட்ட அபிவிருத்தி சபை என்கிற தோல்வியடைந்த முறையை ரணில் முன்நகர்த்துவது திட்டமிட்ட செயலாகும்.

அதன்போக்கில்தான், சமஷ்டி கோரும் தமிழ்க் கட்சிகளை முன் நிபந்தனைகள் இன்றி பேச்சுக்கு வருமாறு அவர் கோருகிறார். அவர், அதிகபட்சம் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் விடயத்தை முடித்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், தமிழ்க் கட்சிகளோ மாகாண சபை முறைகளைத் தாண்டிய சமஷ்டிக் கோரிக்கைகள் சார்ந்த நிலைப்பாடுகளில் இருக்கின்றன. அப்படியான நிலையில், ரணிலின் பேச்சினை விசமத்தனமாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது. காலங்காலமாக தென் இலங்கை ஆட்சியாளர்கள் தந்திரத்தின் வழியாக தமிழ் மக்களை தோற்கடிக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த முயற்சி தமிழ் மக்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த நாட்டையுமே தோற்கடித்திருக்கின்றது. இப்போதும் அந்த முயற்சிகளிலேயே ரணில் ஈடுபடுகிறார். அவர், தன்னுடைய முன்னோர்கள் வழியில் நின்று விலகுவதற்கு தயாராக இல்லை.

யாழில் இருந்து சென்னைக்கு 12ஆம் திகதி முதல் விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப பணிகளிற்காக நேற்றைய தினம் சுற்றுலா அதிகார சபையில் இருந்து இரு அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் விமான சேவைக்கான விமான சீட்டுக்கள் இன்று முதல் முற்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை – சாந்த தேவராஜன்

தொழில்நுட்ப வல்லுனர்களை செவிமடுப்பதற்கு பதில் இலங்கை அதன் மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை செவிமடுக்கவேண்டும் என உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பேராசிரியர் சாந்த தேவராஜன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கருத்துக்களிற்கு செவிமடுக்காத பட்சத்தில் தேசிய பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஆலோசனை குழுக்களை அமைப்பதிலும் செயலணிகளை அமைப்பதிலும் கவனம் செலுத்தினார்கள் ஆனால் இந்த நடவடிக்கைகள் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை சவால்களிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை என தெரிவித்துள்ள அவர் மக்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக பொருளாதார பிரச்சினை இலங்கையில் தொழில்நுட்ப பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது திறமைசாலிகளை தெரிவு செய்து அவர்களை ஒரு அறையில் இருக்கiவைத்தால் அவர்கள் மிகச்சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுப்பார்கள் என்ற சிந்தனை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள சாந்ததேவராஜன் இதுவே பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களை உண்மையில் செவிமடுக்கும் கொள்கை உருவாக்கல் நடைமுறைகள் அவசியம் மக்கள் முக்கியமான சில விடயங்களை தெரிவிக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வல்லுனர்களின் கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயல்வதன் காரணமாக யதார்த்தத்தையும் பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளையும் தொடர்புபடுத்த முடியாத புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் போன்றவற்றுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்வது அவசியம் அதேவேளை பொதுமக்களை கலந்தாலோசிப்பதும் அவசியம் ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 வரவு செலவுதிட்டம் மக்களின் மக்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கான சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை இரு கட்டங்களாக மேலும் 70% அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொண்ட கோரிக்கைக்கு தற்பொழுது அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் இன்று வெளிப்பட்டது.

அதற்கமைய, 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மின்சார சபையின் மேலதிகப் பொது முகாமையாளர் ரொஹான் செனெவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் இந்த விடயங்கள் புலப்பட்டன.

மின்சக்தித் துறையில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மின்சக்தித் துறையுடன் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தற்பொழுது காணப்படும் நட்டத்தை ஈடுகட்டுவதற்கு மின்சாரக் கட்டணம் 70வீத அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மின்சார சபையின் பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டனர்.

மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்டும் நோக்கில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குச் சென்று வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் ஆபத்து தொடர்பிலும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மின்சார சபை தற்பொழுது வங்கிகள் மற்றும் மின்சக்தி விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குச் செலுத்தவேண்டிய கடனாக 650 பில்லியன் ரூபாய் காணப்படுவதாகவும் இதன்போது புலப்பட்டது. இதில் சுமார் 35 பில்லியன் ரூபாய் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி விநியோக நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும், சுமார் 75 பில்லியன் ரூபாய் அனல் மின் உற்பத்தி விநியோகஸ்தர்களுக்கும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டனர். அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் 50 பில்லியன் ரூபாவில் இந்த விநியோகஸ்தர்களின் கடன்களில் ஒரு பகுதியை வழங்க எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சூரிய சக்தி உள்ளிட்ட மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் பிரதிநிதிகள், மின்சக்தியுடன் தொடர்புபட்ட ஏனைய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தமது சிக்கல்கள் மற்றும் மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் குழுவில் அறிவித்தனர்.