’தெமலோ’ இனவாதத்தை குறிக்கும் சொற்பதம், தமிழர் அல்லது திரவிடர் என்றே அழைக்க வேண்டும் – டயனா கமகே

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் இனவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

தமிழர்களை ‘தெமலோ’ என்று குறிப்பிடுவதன் ஊடாகவே இனவாதம் வெளிப்படுகிறது. தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’என்று அழைக்க வேண்டும்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

ஆகவே 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் உயரிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாத காரணத்தால் 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்று நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது.

ஆகவே நடைமுறைக்கு சாத்தியமான வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

நாடு என்ற முதலில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் முதலில் இனவாதத்தை இல்லாதொழித்து தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். அப்போது தான் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ் நபர் ஒருவரை பார்த்து ‘தெமலோ’ என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.அங்கிருந்து தான் இனவாதம் தோற்றம் பெறுகிறது.

தமிழர்களை ‘தமிழர் அல்லது திரவிடர்’ என்று குறிப்பிட வேண்டும்.

அடிப்படை விடயங்களில் இருந்து மாற்றாத்தை ஏற்படுத்தினால் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இனவாதம்,மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்த காலம் முடிவடைந்து விட்டது.

இளம் தலைமுறையினர் புதிய மாற்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள்,அதற்கமைய அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது நாட்டை பிளவுப்படுத்தும்,சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நாட்டின் சுயாதீனத்தை உறுதிப்படுத்திய வகையில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

தமிழ் இளைஞர்களை பொலிசில் இணைத்தால் அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக இருப்பார்கள் – பொலிஸ் மா அதிபர்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களிடம் ஆயுதத்தையும் வழங்கினால் அவர்கள் தனிநாட்டு போரை ஆரம்பித்து விடுவார்கள் என தென்னிலங்கை தீவிரவாத தரப்புக்கள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கி, தமிழ் இளைஞர்களை அதில் இணைத்து, ஆயுதத்தை வழங்கினால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்பவில்லை. தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள். இப்போது அப்படித்தான் செயற்படுகிறார்கள்“. இதுதான் அவரது கருத்து.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்குமிடையில் நடந்த சந்திப்பின் போது, இப்படி குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய சந்திப்பில் – பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களிற்கு- வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஏன் தேவை?, இப்போதைய பொலிஸ் அமைப்பு தொடர்வதில் என்ன சிக்கல் என்பதை அறியவே டிரான் அலஸ் ஆர்வம் காட்டினார்.

ஏனைய அதிகாரங்கள் இருந்தாலும், பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டால், மாகாண முதல்வரால் அவற்றை பிரயோகிக்கவோ, தீர்வை காணவோ முடியாது உள்ளிட்ட காரணங்களை- நிர்வாக ரீதியாக சுட்டிக்காட்டி தமிழ் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

13வது திருத்தத்தின்படி பொலிஸ் ஆணைக்குழுவில் முதல்வர் ஒருவரையே நியமிக்க முடியம் என்பதையும், மத்திய அரசே 2 பேரை நியமிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுகிறது என்பது, மாகாணங்கள் சுயாதீனமாக பொலிசை கையாள்வதல்ல என்பதை தமிழ் தரப்பினர் விளக்கமளித்தனர்.

இந்த சந்திப்பின் ஒரு கட்டத்திலேயே- இந்த பகுதியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தகவல்களை பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

“மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதால், அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என நம்புகிறீர்களா?“ என தமிழ் தரப்பினர் ஒரு கட்டத்தில் கேட்டனர்.

தான் அப்படி நம்பவில்லையென பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஆரம்ப காலத்தில் பல தமிழ் பொலிசார் கடமையிலிருந்தாலும், பா.நடேசன் (விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர்) ஒருவரே புலிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடியதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தால், அவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கே விசுவாசமாக செயற்படுவார்கள் என்பதில் தனக்கு சந்தேகம் இல்லையென்றும், இப்பொழுதும் அப்படியே செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலையீட்டினால் பறாளாய் அரச மரத்தை விஞ்ஞானபூர்வ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

பறாளாய் முருகன் கோயிலின் தலா விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்து, முறையற்ற விதமான வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன், விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாமல் எப்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என தொல்லியல் திணைக்களத்தினரிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இன்று (9) நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, பறாளாய் முருகன் கோயில் விடயமாக பேச்சு நடத்தினார்கள்.

இன்று, இந்த விவகாரம் பற்றி இருவரும் தனது கவனத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர், இப்படியொரு பிரச்சினை நீடிப்பது தனது கவனத்துக்கு யாராலும் கொண்டு வரப்படவில்லையென ரணில் தெரிவித்தார்.

பறாளாய் முருகன் கோயிலின் வரலாறு சுமார் 300 ஆண்டுகளிற்கு உட்பட்டது என குறிப்பிட்டு, சம்பவத்தின் பின்னணியையும், வரலாற்று சுருக்கத்தையும் த.சித்தார்த்தன் விளக்கமளித்தார்.

இந்த விவகாரத்தில் 2 உண்மைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். இந்த மரம் 300 வருடங்கள் பழமையானது என்பதால், சங்கமித்தை இலங்கைக்கு 300 வருடங்களின் முன்னரே வந்தார், பௌத்தம் 300 வருடங்கள் மாத்திரமே பழமையானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இந்த மரம் சங்கமித்தை நாட்டிய மரமல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டனர்.

பறாளாய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரம், சங்கமித்தை நாட்டிய மரமாக இருக்காது என்பதே தனது அபிப்ராயம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது நாட்டிலிருந்த அரசமரங்களையெல்லாம் தறித்து விட்டதாக தெரிவித்தார். அப்படியானால் வர்த்தமானியை மீளப்பெறுமாறு கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

மரத்தின் ஆயுட்காலத்தை அளவிடும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரா அது வர்த்தமானியிடப்பட்டது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

அப்படியான பரிசோதனையெதுவும் மேற்கொள்ளாமல், இது சங்கமித்தை நாட்டிய மரம் என்ற முடிவிற்கு எப்படி தொல்லியல் திணைக்களம் வந்தது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

இதன்மூலம், அந்த வர்த்தமானி இனவாத நோக்கமுடைய, சட்டபூர்வமற்ற வர்த்தமானியென்பது புலப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களம் முறையற்ற விதமாக செயற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதுடன், அவர்கள் எந்த விஞ்ஞானபூர்வ நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் எப்படி வர்த்தமானியிட்டார்கள் என்பது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கையிட, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பணித்தார்.

உடனடியாக வர்த்தமானியை மீளப்பெறுவது, தென்னிலங்கை தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தி, தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக மரத்தின் ஆயுட்காலத்தை கண்டறியும் சோதனை நடத்தி, வர்த்தமானியை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

இராணுவத்தினரின் தகவலுக்கமையவே தொல்லியல் திணைக்களத்தினர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்கள் என்ற தகவலையும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மயிலந்தனை படுகொலை 31 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுட்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மயிலந்தனை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன் கிழமை (9) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

உயிர் நீத்தவர்களின் நினைவாக ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று, பொதுச் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவேந்தல் உரையினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குகன் மற்றும் வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர் கண்டுமணி லவகுகராசா ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு நீதி கோரிய மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த 9.8.1992 ஆம் ஆண்டு அன்று புனானை மயிலந்தனை கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்,பெண்கள் உட்பட 39 பேர் வெட்டியும் சுடப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.34 பேர் காயமடைந்தனர்.

நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புணானை இராணுவத்தினரே இப் படுகொலையை நிகழ்த்தியதாக தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது.

அப்போது இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் 24 இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு இராணுவத்தினரும் குற்றம் இழைக்கவில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.மேன் முறையீடு செய்வதற்கு அப்போதிருந்த சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே 2002 நவம்பர் 27 இல் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.

எனவே மீளவும் நீதிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை வருகை

அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களத்தின் உலகளாவிய  ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்  ரிச்சர்ட் நெபிவ் இம் மாதம் 8 ஆம்  திகதி முதல் 9 ஆம்  திகதி வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக  கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

.அவருடன் வருகை தரும் தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் டிலான் ஐகென்ஸ் அடங்குவார்.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்கம், எதிர்க்கட்சி, சர்வதேச நாணய நிதியம், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களையும் நெபிவ் சந்திப்பார்.

ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள், மற்றும் நாட்டிலுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் என்பன தொடர்பில் ஆராய்வதே அவரது வருகையின் நோக்கமாகும்.

இலங்கையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா தவறிவிட்டது – டி. ஆர் பாலு

இலங்கையில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இந்திய மத்திய அரசாங்கம் தவறவிட்டது என திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில் அதில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதில் இந்திய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை . தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பேசுகிறார்; ஆனால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏன் குறைக்கவில்லை?

160 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜக அரசு கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சங் பரிவார் எதிர்ப்பால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால், பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க முடியவில்லை.

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ரூ.15 லட்சம் அனைவருக்கும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால். இதுவரை ரூ.15 கூட தரவில்லை.

பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது.

எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு நிதி வழங்க அரசாங்கம் ஒப்புதல்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ”அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று களஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ”கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதியின் பிரிவில் இருந்து நிதி கிடைக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது” என்றார்.

தமிழர் பிரதேசங்களை பெளத்த தொல்லியல் இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது – ஆறு திருமுருகன்

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னங்களை பௌத்த அடையாள இடங்களாக மாற்ற நினைப்பது மிகுந்த வேதனை தருகிறது. கிழக்கில் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சைவ மக்களின் புனித தீர்த்தமாக பலநூறு வருடங்களாக பேணிப்பாதுகாக்கப்பட்டது.

சைவசமயத்தை பெரிதும் நேசித்த இலங்கை வேந்தன் இராவணனோடு தொடர்புடைய இப்புனித தீர்த்தம் இன்று தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் அபகரித்துள்ளமை அநீதியான செயலாகும். தொடர்ந்து தொன்மை வாய்ந்த சைவ ஆலயங்களை திட்டமிட்டு அபகரிக்க நினைப்பது அதர்மச் செயலாகும்.

தற்போது பறளாய் முருகன் கோவிலில் உள்ள அரசமர விருட்சத்தை சங்கமித்தை வரலாற்றோடு தொடர்புபடுத்தி வர்த்தமானி வெளியிட்டுள்ளமை சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. சைவ நிறுவனங்களையோ, வடக்கில் உள்ள பல்கலைக்கழக அறிஞர்களையோ தொடர்பு கொள்ளாமல் தொல்லியல் திணைக்களம் புதிய பிரகடனங்கள் செய்வது கவலையளிக்கிறது. கீரிமலைப் புனித தீர்த்த கேணியை திடீரென தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது மிகவும் தவறான செயலாகும்.

தெல்லிப்பழை கிராம முன்னேற்றச் சங்கம், வல்லிபுரம் என்ற பெரியவரின் நிதியுதவியுடன் 1916ஆம் ஆண்டு தூர்வைக் குளமாக இருந்த இக்கேணியை பொலிகலால் கட்டி பாதுகாத்தது. இன்றுவரை வலிவடக்குப் பிரதேசசபை குளத்தைப் பாதுகாப்பதுடன் காவலர்களை நியமித்து கண்காணித்து வருகிறார்கள்.

திணைக்களத்திற்கு உரித்தாக பிரகடனம் செய்திருப்பது நீதியற்ற செயல். எனவே ஜனாதிபதி தொல்லியல் திணைக்களத்தின் மேற்குறித்த பிரகடனங்களை மீளப்பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவமக்களின் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறது. தாங்கள் இவ்விடயத்தில் உடன் அக்கறை எடுத்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.

தேவைப்படும் போது தமிழர்களுடன் ஒப்பந்தம் செய்வதிலும், தேவை முடிந்ததும் கிழித்தெறிவதிலும் சிங்களவர்கள் வல்லவர்கள்: ஜனா எம்.பி

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை நன்கு கற்றுணர்ந்த எமக்குத் தெரியும் சிங்கள அரசாங்கமும் பௌத்த சிங்கள பேரினவாதிகளும் தமக்குத் தேவையெனில் இரு தரப்பு ஒப்பந்தங்களைச் செய்வதில் வல்லவர்கள். அதே போல அந்த ஒப்பந்தங்களைச் செயற்படுத்தாமல் பின்வாங்குவதில் அதனைக் கிழித்தெறிவதில் அதைவிட வல்லவர்கள் என்பதை நான் மட்டுமல்ல, இந்த நாடு மட்டுமல்ல, சர்வதேசமும் நன்கு அறியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று (8) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேர்களை மீட்டு உரிமையை வென்றிட என்ற மலையக எழுச்சிப் பயணம் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு எங்களது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களது வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அதே போல ஏறாவூர் 5ஆம் குறிச்சியில் நகர சபையிலே தொழிற்செய்யும் 15 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களும் அதே போன்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அந்தப் பிரதேசத்தின் ஞானசேகரம் கஜேந்திரன் என்பவரின் முயற்சியினால் நான் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்திருந்தேன் இருந்தும் அந்த நிலமை இப்போது கிழக்கு மாகாண ஆளுநரின் கைகளுக்குச் சென்றிருக்கின்றது. ஆவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இலங்கை அரசியலமைப்பில் ஒரு அங்கமாக இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக சில வார்த்தைகள் பேசலாம் என்று நினைக்கின்றேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதில் இத்தனை வருடகாலமாக அரசாங்கம் ஏன் முழுமையான அக்கறையைச் செலுத்தவில்லை என்பதனை இச் சபையில் கேள்வியாக முன்வைக்க விரும்புகிறேன்.

இலங்கை அரசாங்கத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் இந்திய நாட்டின் பிரதமரான ராஜீவ் காந்திக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்குத் தீர்வாக இந்த மாகாண சபை முறைமை அமையும் என்ற நம்பிக்கை அன்றைய நிலையில் முழுமையாக இருக்கவில்லை என்பது உண்மை.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரான காலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளான மொழி, பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரம், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் உள்ளிட்டவைகள் பின்னரான காலத்தில் தமிழ், சிங்கள மக்கள் இடையே மோதல்களை உருவாக்கியது.

1956ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த டட்லி சேனாநாயக்க பதவி விலகியதையடுத்து ஆட்சி பீடம் ஏறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, பிரதமராக பதவியேற்று சிங்கள பண்பாட்டின் பாதுகாவலன் என தன்னை அடையாளப்படுத்தி சிங்கள மொழிச் சட்டத்தைக் கொண்டுவந்தார்.

தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் சட்டமாக இது பார்க்கப்பட்டது. இதற்கெதிராக தமிழர்கள் அறவழிப் போராட்டங்;களை நடத்தினர். இதையடுத்து, அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கும், தந்தை செல்வநாயகத்திற்கும் இடையில் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள், எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதனால் அவ் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.

தமிழ் – சிங்கள மக்களிடையே இனப் பிரச்சினை ஏற்படுவதற்கு முதலாவது காரணியாக தனிச் சிங்கள சட்டம் அமைந்தது.

அடக்குமுறைகள், சிங்களக்குடியேற்றங்கள், பல்கலைக்கழக தரப்படுத்தல், 83 கலவரம் எனத் தொடர்ந்த நெருக்கடிகளுக்கிடையில் தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் கைச்சாத்திடப்பட்டது.

காணி, பொலீஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கும் வகையில் வடக்கு, கிழக்கை இணைத்து 8 மாகாணங்கள் உருவாக்கப்பட்டன.

மாகாண சபை முறையின் ஊடாக, காணி, நிதி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசாங்கமானது இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்கவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து உத்தரவு பிறப்பித்தது.

வடக்குக் கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் அதன் முழுமையான நடைமுறைப்படுத்தலின்மை காரணமாகவே அன்றைய முதலமைச்சர் வரதராஜபெருமாள் அவர்கள் தமிழீழத்தினைப் பிரகடனப்படுத்திவிட்டு இந்தியாவுக்குச் சென்றார்.

13ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாது போனாலும், பல குறைபாடுகளுடன் வடக்கு கிழக்கு தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை இயங்கச் செய்யப்பட்டது. அதன் பின்னர் வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை இயங்கச் செய்யப்பட்டது. இரு சபைகளும் கலைக்கப்பட்டு பல வருடங்கள் கடந்த பின்னரும் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால், ஆளுனர்களின் அதிகாரத்தின் கீழே இச் சபைகள் இரண்டும் இப்போது இயங்கி வருகின்றன.

2009ஆம் ஆண்டில் தமிழர்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டது. அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி அவர்கள் 13 பிளஸ், பிளஸ் வழங்கப்போவதாக இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் வாக்குறுதியளித்தார். ஆனால் அதுவும் நடைபெற்றிருக்கவில்லை. இப்போதும் காலங் கடத்தல்களுக்கான முயற்சிகளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் வேரூன்றிய சட்டவிதிக் கூறுகளைக் கொண்டுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஸ்ரியைக் கோரும் தமிழர்கள் 13யேனும் அரசாங்கம் வழங்கும், அதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில், ஒற்றையாட்சி முறையின் கீழுள்ள இலங்கை அரசாங்கமானது மாகாண அரசின் நிரல் ஊடாகவோ அன்றேல் மத்தியும் மாகாணமும் ஒத்துப்போகவேண்டிய நிரல் ஊடாகவோ அமுலாக்கப்படக்கூடிய எந்த அதிகாரப்பரவலாக்கல் மூலமாகவும் வடக்குக் கிழக்குக்கான தீர்வு வழங்கப்படாது என்ற சிந்தனையுடன் தமிழர்களின் ஒருதரப்பினர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் இருக்கும் நீதி மற்றும் மக்களாட்சி முறைகள் ஒரு போதும் தமிழர்கள் சிறிதளவேனும் அதிகாரத்தினைப் பெற்றுவிடக் கூடாது என்ற சிந்தனையுடன் இருக்கின்ற பெரும்பான்மைச் சமூகத்தினருடன் உடன்பாட்டுக்கு வரப்போவதில்லை.

அரசியல் யாப்புத் தொடர்பான கள யதார்த்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத் தரப்புகளிடம் உச்சபட்சக் கோரிக்கைக்கான தீர்வாக எதனைக் கோருவது என்ற கேள்விக்குப் பதிலாக 13ஆம் திருத்தத்தையேனும் உடனடித் தீர்வாக வழங்குவதற்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று நாங்கள் இப்போதும் நம்புகிறோம்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற போர்வையிலும் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையிலும் வடக்கு-கிழக்கு மீதான நெருக்கடிகளும் அத்துமீறல்களும் நடந்து வருகின்றன.

இன்றைய ஜனாதிபதி 13வது திருத்தத்தினை தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அமுல்படுத்துவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ளாது தன்னுடைய தந்திரத் தனத்தினைப் பயன்படுத்தி காலங்கடத்துவதற்கான செயற்பாடுகளை சர்வகட்சிச் சந்திப்பென்றும், நிபுணர் குழு அமைத்தலென்றும் மேற்கொண்டு வருகிறார். இதுவும் கடந்த காலத்தில் நாம் அடைந்த ஏமாற்றங்களில் ஒன்றாக மாறும் என்று நாங்கள் அச்சம் கொண்டிருக்கிறோம். அதனை இல்லாமல் செய்வது ஜனாதிபதி அவர்களின் கைகளிலேயே இருக்கிறது.

ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்களின் இணைபிரியா வடக்கு-கிழக்குத் தாயகம் என்ற சிந்தனையை தவிடு பொடியாக்கும் செயற்பாடான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது இப்போது வடக்கு கிழக்கில் தமிழர்களின் பெரும்பான்மையை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது,

சிங்கள தேரவாத பௌத்த மேலாண்மையின் மஹாவம்ச மனநிலையோடு முன்னெடுக்கப்படும் ஒற்றையாட்சிச் சட்டக்கூறுகளுக்குள் புரையோடிப் போயுள்ள இலங்கை அரசியலமைப்பினது அதன் ஒரு அங்கமாக இருக்கின்ற 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் ஜனாதிபதி பாராளுமன்றத்தினை நாடுகிறார் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. அதே நேரத்தில், 2009 இற்குப் பின்னரான கடந்த 14 வருடங்களிலும், நாடு கண்டிருக்கின்ற பல்வேறு சவால்களையும் அது சீர்தூக்கிப் பார்க்கவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

அரசியற் கோரிக்கைக்காக அரம்பிக்கப்பட்ட போராட்டமானது கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதைக்கொப்பாக மாறிவிட்டது,
பூட்டானின் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் உருவான திம்புத் தீர்மானம் முதல் அதன் பின்பு வந்த ஒப்பந்தங்கள். பேச்சுக்களின் முடிவுகள், தீர்மானங்கள் எல்லாமே இலங்கைத் தமிழர்களின் முரண்பாட்டைத் தீர்த்து வைக்கவில்லை. இவ்வாறிருக்கையில் இப்போதும் 13 கோரப்படுகிறது. அதற்கும் தமிழ்த் தரப்பின் சிலரும் கடும் போக்குச் சிங்கள அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தே வருகின்றனர்.

அபிவிருத்தி அரசியலும் நல்லிணக்க மாயையும் பூசப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பூசி மெழுகலை நாம் எவ்வாறு நம்பமுடியும்.

அரசியலமைப்பிலுள்ள மாகாண சபை முறைமையை அமல்படுத்துமாறு தமிழர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், இன்று வரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசாங்கம் தவிர்த்து வருகின்றது.

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி கொண்டாடப்பட்ட 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கினார். ஆனால் அது நடைபெறவில்லை. இப்போது 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி கேட்கிறார். இது பெரும் நகைப்புக்கானது என்றே கூறிக் கொள்ளவும் முடியும்.

இந்த உயரிய சபையில் இதுவரை நான் உரையாற்றியதற்கும் இன்று உரையாற்றுவதற்குமிடையிலே பாரிய வித்தியாசத்தை உணர்கின்றேன். இதுவரை நான் உரையாற்றிய வேளை ஏற்படாத துயரம், கவலை, சோகம் இன்று இந்த உரையினையாற்றும்போது ஏற்படுகிறது.

எனது அரசியல் பயணம் பற்றி இங்கு இருப்பவர்கள் பலருக்குப் புரியாது. ஒரு சிலர் அறிந்திருக்கக் கூடும். இந்த நாட்டில் தமிழர்கள் தமிழர் தம் பிரதேசங்களில் தமது மண்ணை, தமது மொழியை, தமது பிராந்தியத்தை, தமது கலாசார பாரம்பரிய தொன்மங்களைப் பாதுகாத்து பெருமையுடன் வாழமுடியாது அதற்கு உங்கள் பௌத்த சிங்கள மகாவம்ச மேலாதிக்கம் இடம்தராது என்பதை கற்றுத்தந்த உங்களது ஆட்சி காரணமாக எமது மண்ணை, எமது மக்களை, எமது மொழியை, எமது பண்பாட்டுப் பாரம்பரியத் தொன்மங்களைப் பாதுகாக்க, ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய முன்னாள் ஆயுதப் போராளி.

எனது அரசியல் வாழ்வொன்றும் இங்குள்ள பலரைப் போல அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழிவந்ததல்ல. அவர்கள் சேர்த்த பெயர், சொத்து, சுகம் வழி வந்ததுமல்ல. எம் மண், என் நிலம், என் மொழி, என் மக்கள், அவர் தம் வாழ்வுரிமை என்பவற்றுக்காக என் கல்வி துறந்து என் இளமையைத் தியாகம் செய்து, என் உயிரினை துச்சமென மதித்து, மேனியெங்கும் விழுப்புண்பட்டு ஒரு காலம் ஆயுதம் ஏந்திப் போராடிய ஆயுதப் போராளி என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்.

ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட திடீர் மாற்றம். அதைத் தொடர்ந்து உருவான இலங்கை இந்திய ஒப்பந்தம். அதனால் நாட்டுக்கு வருகை தந்த இந்திய அமைதிப்படை எமது ஆயுதங்களைக் களைந்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் எம்மைக் கலக்க வைத்தது.

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றை நன்கு கற்றுணர்ந்த எமக்குத் தெரியும் சிங்கள அரசாங்கமும் பௌத்த சிங்கள பேரினவாதிகளும் தமக்குத் தேவையெனில் இரு தரப்பு ஒப்பந்தங்களைச் செய்வதில் வல்லவர்கள். அதே போல அந்த ஒப்பந்தங்களைச் செயற்படுத்தாமல் பின்வாங்குவதில் அதனைக் கிழித்தெறிவதில் அதைவிட வல்லவர்கள் என்பதை நான் மட்டுமல்ல, இந்த நாடு மட்டுமல்ல, சர்வதேசமும் நன்கு அறியும்.

டட்லி -செல்வா ஒப்பந்தம், பண்டா – செல்வா ஒப்பந்தம், யாழ். நகரில் அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அளித்த வாக்குறுதி என்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் எம்மை நம்பவைத்து கழுத்தறுத்தவையே.

இலங்கை இந்திய ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்த நியமங்களுக்கு உட்பட்ட ஒரு ஒப்பந்தம் என்பதனால், அதனை மீறமாட்டீர்கள் அதன் வழி வந்த 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தையும் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்பினோம். ஆனால், ஒப்பந்தக் கடப்பாட்டை மீறுவதில் சர்வதேசத்துக்கே தண்ணீர் காட்டும் திறமையுள்ளவர்கள் என்பதனைக் காட்டிவிட்டீர்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இலங்கை அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது அரசியல் சீர்திருத்தம் உட்பட இதுவரை எமது அரசியலமைப்பு 22 சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது. இவை யாவும் இலங்கை அரசியலமைப்பின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளின் பிரமாணங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது. திருத்தம் நிறைவேற்றிய பின்னர் அத் திருத்தங்கள் யாவும் அரசியலமைப்பின் பிரிக்க முடியாத ஒரு பாகமாக சட்ட ரீதியான வலுவினைப் பெற்றுக் கொண்டன.

எனவேதான் நான் கூறுகின்றேன். எமது 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தம் எமது அரசியலமைப்பின் குறைப் பிரசவம் அல்ல. கருச்சிதைவுக்குட்பட்டு வந்ததுமல்ல. வலதுகுறைந்ததுமல்ல. 13வது அரசியல் சீர்திருத்தத்தின் ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு வரிகளும் இலங்கையின் பிரிவுபடாத் தன்மையையும் ஒற்றையாட்சித் தன்மையையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலான ஏற்பாடுகளையே கொண்டுள்ளது. உண்மையிலேயே நான் கேட்கின்றேன். இந்த உயரிய சபையிலிருக்கும் எத்தனைபேர் எமது அரசியலமைப்பின் 13ஆவது சீர்திருத்தத்தினை கருத்தூன்றி தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் வாசித்துள்ளீர்கள். கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது போல, யாரோ அன்று கூறியவற்றை இன்று மனதில் ஏற்றுக் கொண்டு 13ஆவது அரசியல் சீர்திருத்தம் பற்றிக் கதைக்கின்றீர்களேயொழிய, 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு கதைப்பதாக நான் உணரவில்லை.

எமது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் இன்னும் ஒரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை நிறைவேற்றப்பட்ட ஏனைய அரசியல் சீர்திருத்தங்களை விடவும் பெருமைமிக்கது. இலங்கைப் பாராளுமன்றத்தில் 6 இல் 5 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ஒரேயொரு சீர்திருத்தம் இந்த 13ஆவது சீர்திருத்தம். அதில் இன்னுமொரு முக்கிய விடயம் அரசியலமைப்பின் 6ஆவது திருத்தத்தால் பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இச் சீர்திருத்தத்தில் வாக்களிக்கவில்லை. அப்படியெனில் இந்தப் 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு 6இல் 5 பெரும்பான்மையுடன் வாக்களித்து சாதனை படைத்து நிறைவேற்றிய பெருமை முற்று முழுதாக சிங்கள பேரினவாதக் கட்சிகளையே சாரும். இந்த உண்மையினை உணராது 13ஆவது திருத்தச் சட்டத்தை இந்தப் பாராளுமன்றத்தில் ஏதோ தமிழ்க் கட்சிகள் நிறைவேற்றியதுபோல் கோசமும் கூக்குரலுமிடுகின்றீர்கள்.

எல்லாவற்றையும் விட இந்த 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தில் குறிப்பிடக்கூடிய இன்னுமொரு முக்கிய விடயம் இச்சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது எமது நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அவர்கள், அந்த அமைச்சரவையில் முக்கிய கபினற் அமைச்சராக இருந்தவர். இச் சீர் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கும் நிறைவேற்றுவதற்குரிய கூட்டுப் பொறுப்பினை அளிக்கவேண்டிய வரலாற்றுக் கடமைமிக்கவர் நாட்டில் அண்மைக்காலமாக தொல்லியல் வரலாறு, புராதன விகாரைகள் வரலாறு, மகாவலி காணி வரலாறு போன்ற யாவற்றையும் அக்குவேறு, ஆணி வேறாக உரிய அதிகாரிகளிடத்தில் கேட்கும் அளவுக்கு கற்றுணர்ந்த எமது ஜனாதிபதி இந்த 13வது அரசியல் சீர்திருத்த விடயத்தில் தனது வரலாற்றுக் கடமையினை மறந்திருக்கமாட்டார் என நான் நினைக்கின்றேன்.

எமது அரசியலமைப்பின் 13வது சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாகியது. அத்தியாயம் 17 (அ) மூலம் மாகாண சபைகள் ஸ்தாபிப்பது, ஆளுநர் நியமனம், ஆளுநர் அதிகாரம், மாகாண சபைகள் ஆக்கும் நியதிச்சட்ட விதிகள், மாகாண அமைச்சரவை பற்றிக் குறிப்பிடுகின்றது.

அதன் 9ஆம் அட்டவணை நிரல் ஒன்று மாகாண சபைகள் பிரயோகிக்கக்கூடிய அதிகார எல்லைகளைக் குறித்துநிற்கின்றது. பின்னிணைப்பு ஒன்று சட்டமும் ஒழுங்கும் பற்றிக் குறிப்பிடுகிறது. இதில் மாகாண பொலிஸ் அதிகாரம் பற்றி மிகத் தெளிவாகக் கூறுகிறது. பொலிஸ் மா அதிபர் இலங்கைப் பொலிஸ் படையின் தலைவராக இருப்பார் மாகாண மட்டப் பொலிஸ் படையானது பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இயங்கும். இதே போல தேசிய பொலிஸ் ஆணைக்குழு, மாகாண பொலிஸ் ஆணைக்குழு தொடர்பாகவும் விளக்கமாக, புரியக்கூடிய வகையில் எடுத்துரைக்கின்றது. இந்த ஏற்பாடுகளின் கீழ் தான் இலங்கையின் மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒன்றிணைந்த வட- கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராஜா அவர்கள் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் தற்பொழுது நீங்கள் மாகாண சபை பொலிஸாருக்கு பொல்லுப் பொலிசா, கம்புப் பொலிசா, தடிப் பொலிசா என வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை எவ்விதத்திலும் குலைக்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் நிருவாகப் பரவலாக்கத்தை மட்டுமே மேற்கொண்டுள்ளது. மாகாண சபையைப் பற்றிப் போசும் போது, 13ஆவது திருத்தம் பற்றிப் பேசும் பொழுது எமது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை என்பது ஏதோ வட கிழக்குக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்ற பிரம்மையில் இன்றும் இருக்கின்றார்கள். உண்மையில் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபையினை, அதன் அதிகாரங்களை அதிகம் சுவைத்ததும், அதன் மூலம் அதிகம் பயன் பெற்றதும் வட- கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் என்பதே உண்மையாகும்.

இந்த உயரிய சபையில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், ஜனாதிபதி அவர்கள் உட்பட அனைவரும் பதவியேற்கும் போது செய்யப்பட்ட சத்தியப்பிரமாண வாசகத்தின்பால் உங்களை ஈர்க்கின்றேன். எமது சத்தியப்பிரமாணத்தின் போது இலங்கை ஜனநாயக் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கும் சட்டத்திற்கும் இணங்க பற்றுறுதியோடு எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றிக் காப்பேனென்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கின்றேனென்று பிரமாணம் எடுத்துள்ளீர்கள். அப்படியானால் அரசியலமைப்பின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமான 13ஆவது சீர்திருத்தத்திற்கு முரணாக, எதிராக, உங்கள் கருத்துக்களை வெளியிடுவது நீங்கள் செய்த சத்தியத்துக்கு முரணானதாக அமையாதா, அது அரசியலமைப்பை மீறும் செயலாகாதா?, அவ்வாறெனில் அரசியலமைப்பை மீறிய தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு உங்களை உட்படுத்த முடியாதா, ஜனாதிபதி அவர்கள் தான் செய்த, செய்யாத செயலுக்கு தண்டனைக்குட்படுத்த முடியாதவரெனினும் அரசியலமைப்பை மீறும் போது அவரும் அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படவேண்டியவரென்று பொருள் கோடல் செய்யமுடியாதா.

தூங்குபவர்களைத் தட்டியெழுப்பலாம், புரியாதவர்களுக்குப் புரிய வைக்கலாம், அறிவில்லாதவர்களெனின் அறிய வைக்கமுடியும். ஆனால், நமது அரசியல்வாதிகள் இவற்றை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இல்லை. தெரிந்து கொள்ளும் பக்குவத்திலுமில்லை. அறிந்து கொள்ளும் பக்குவத்திலுமில்லை. ஆனால், இவர்கள். எமது நாட்டின் எதிர்காலத்தோடு விசப்பரீட்சை விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒரு ஆறு தசாப்த காலம் எம் நாடு பின்நோக்கிச் செல்வதற்கான முன்னாயத்தங்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் சிந்தியுங்கள். எம் நாடு பெரிதா, நம் நாட்டுக்கான தீர்மானம் எடுப்பது பெரிதா, இல்லை. நமது கட்சி, நமது பதவி, நமது அதிகாரம் தொடர்பான தீர்மானம் மட்டுமே முக்கியமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய இறுதித் தருணம் இது என்பதை மறவாதீர்கள்.

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் முன்மொழிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இன்றையதினம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்கவை நேரில் சந்தித்து முன்மொழிவுகளை கையளித்தனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாங்கள் ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக மேற்கூறியவை தொடர்பாக உங்கள் Ref PS/PCA/03-iii 2023 ஆகஸ்ட் 2 தேதியிட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி, எங்கள் கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்க விரும்புகிறோம்.

1. ஏற்கனவே 1988 இல் பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையுடன் 13A அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.
2. அன்றிலிருந்து நாடு முழுவதிலும் மாகாண சபைகள் நிறுவப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலை நடத்துவதற்காகக் கலைக்கப் படும் வரை செயல்பட்டன.
3. எனவே ஏற்கனவே இருக்கின்றதானதும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதையும் நடைமுறைப்படுத்துவதற்கு கருத்துக்களை கோர வேண்டிய அவசியமில்லை.
எவ்வாறாயினும், 13A இன் கீழ் வழங்கப்பட்ட சில மாகாண சபை அதிகாரங்கள் திட்டமிட்ட வகையில் காலத்திற்கு காலம் அவ்வப்போது திரும்பப் பெறப்பட்டன.

மாகாண சபைகளில் இருந்து மீளப் பெறப்பட்ட அவ் அதிகாரங்களை மீண்டும் வழங்கி, காணி, பொலிஸ், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் 13A ஐ அதன் அசல் வடிவில் நடைமுறைப் படுத்த நாங்கள் முன்மொழிகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது