பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவை நியமித்து வர்த்தமானி வெளியீடு

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது தமிழக  அரசாங்கம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பாரிய அரிசி தொகையினை நன்கொடையாக வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத் தூதுவர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் நல்லிணக்கம் இல்லாமல் போகும் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார்.

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் காணி தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான விசேட பொறிமுறை ஒன்று வகுக்கலாமே தவிர காணி அதிகாரங்களை வழங்க கூடாது என்றும் கூறினார்.

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஜனாதிபதியை சந்தித்துத் கலந்துரையாடினார் இம்மானுவேல் மக்ரோன்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

ஒரு மணித்தியாலம் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் நட்புரீதியான மற்றும் பயனுள்ள இருதரப்பு விடங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகளில் பிரான்ஸின் ஈடுபாட்டிற்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்து – பசுபிக் வலய பிரச்சினைகள் தொடர்பில் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி இணக்கப்பாட்டிற்கான மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தான் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் நினைவு கூர்ந்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்ததோடு, இலங்கையின் நான்காவது பெரிய கடன் வழங்குனர் என்ற வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனா தனது இரண்டாவது வௌிநாட்டு இராணுவத்தளத்தை ஹம்பாந்தோட்டையில் அமைக்க அதிக வாய்ப்பு

சீனா தனது நாட்டிற்கு வெளியே அமைக்கவுள்ள இரண்டாவது இராணுவத்தளத்தை பெரும்பாலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் William & Mary பல்கலைக்கழகத்தின் AidData ஆய்வுத் திட்டத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவின் துறைமுகத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வெளிநாட்டு கடற்படைத் தளங்களைப் பாதுகாப்பது என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 46 நாடுகளிலுள்ள 78 சர்வதேச துறைமுகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்கட்டமைப்பை மேம்படுத்தவும், எண்ணெய், தானியம் மற்றும் உலோகப் பொருட்களின் இறக்குமதி – ஏற்றுமதிக்காகவும் சீன வர்த்தக நிறுவனங்கள் செய்துள்ள பாரிய முதலீடுகள் தொடர்பான விரிவான தகவல்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சீன வர்த்தக நிறுவனங்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை தமது ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ள 78 சர்வதேச துறைமுகங்களின் நிர்மாணத்திற்காக செலவிட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக அடுத்து வரும் 5 வருடங்களில் ஈக்வடோரின் கினி இராச்சியத்தின் வாடா துறைமுகம் , பாகிஸ்தானின் Gwadar துறைமுகம் மற்றும் கெமரூன் இராச்சியத்தின் க்ரீப் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக பாகிஸ்தானின் Gwadar துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சீனா அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையில் காணப்படும் நட்பே அதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா மேற்கொண்டுள்ள முதலீடு, இவ்வாறான திட்டமொன்றுக்காக சீனா செய்துள்ள மிகப்பெரிய முதலீடு என்பதுடன், இதன் பெறுமதி 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பெரும்பான்மை பலத்தை சீனாவிற்கு பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு இணக்கம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏற்கனவே தனது முதல் வெளிநாட்டு இராணுவத்தளத்தை கிழக்கு ஆபிரிக்காவின் ஜிபூட்டி துறைமுகத்தில் நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய வகையில் கடையடைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடன் பேரணி ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகத்தின் ஊடாக பயணித்தனர். இந்த போராட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கு அமைவாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் , வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய ஹர்த்தால் மற்றும் பேரணி ஆகியன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலாகாலமாக மனிதப் புதைகுழிகளே தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக உள்ளது. செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை இந்த விவகாரம் நீண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் கொக்குதொடுவாய் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் போர் உச்சமாக நடைபெற்றுகொண்டிருந்தது. எனவே போர்க்காலப் பகுதியில் தான் இந்த புதைகுழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசியலாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார். காமராஜரின் ஸ்தாபனக் காங்கிரஸ், திமுக, மதிமுக ஆகிய கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்த இவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை கலவரத்தை நினைவுகூரும் ‘கறுப்பு ஜூலை’ தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:

  • இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் உருவான ஈழத் தமிழர் பிரச்சினை இன்னும் முடியாமல் நீள்கிறதே?

ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சிம்லாவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘‘இந்தியாவின் ஒரு தீவாகத்தான் இலங்கை இருந்தது’’ என்று கூறி அதையும் சேர்த்துக் கொள்ள மவுன்ட்பேட்டன் யோசனை தெரிவித்தார். அதற்கு நேருவும், வல்லபபாய் படேலும் சம்மதிக்கவில்லை என்ற கூற்றும் உண்டு. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றியதாலும், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களாலும் மவுன்ட் பேட்டனுக்கு இந்த யோசனை உதித்துள்ளது.

இந்த இரு தரப்பினரும் அப்போது சிங்களவர் எண்ணிக்கைக்கு இணையாக இருந்துள்ளனர். இதை குறைக்க தேயிலை தொழிலாளர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழகம் அனுப்பப்பட்டனர். அதன்பின்னர் தமிழர்களுக்காக இலங்கை அரசு 1964-ம் ஆண்டுவரை 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அவற்றில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. காவல் துறை, அரசு நிர்வாகம் என அனைத்திலும் சிங்களர்கள் ஆதிக்கம். இவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. இதுபோன்ற பல இன்னல்களால், மே 14, 1976-ல் கொண்டுவரப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டின் தீர்மானத்துக்கு பிறகு தமிழர்களின் போராட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1970,1974-ம் ஆண்டுகளை விடப் பெரிதாக, 1983-ல் ‘கருப்பு ஜூலை’ எனும் பெரும் கலவரம் ஏற்பட்டது.

தலைநகர் கொழும்பில் கடந்த ஜூலை 24, 1983-ல் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்ற கலவரம் தனித்தமிழ் ஈழப்போராட்டமாக மாறியதில், அப்போதுசுமார் 5,000 பேர் உயிரிழந்து ஒன்றரை லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்தனர். பிரபாகரனை போன்ற இலங்கை தமிழர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன்பிறகு தான் இலங்கை தமிழர்கள் அகதிகளாக நாட்டை விட்டு கிளம்பத் தொடங்கினர். இதை முன்னின்று நடத்தியவர் அன்று அமைச்சராக இருந்தவரும், ஜெயவர்தனேவின் மருமகனுமான தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கே.

இப்பிரச்சினையில், முன்னாள் பிரதமர்களை விட தற்போதைய பிரதமர் மோடியின் அணுகுமுறை எப்படி உள்ளது?

பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தில், சீனாவின் ஆதிக்கமும், கோயில்களில் புத்த விஹாரங்கள் அமைத்து மாற்றப்படுவதும் என இரண்டு பிரச்சினைகளும் கவனத்தில் உள்ளன.யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்காக ஒரு கலாச்சார மையம் கட்ட வைத்துள்ளார் பிரதமர் மோடி. இவர், இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவுக்கு சவாலாகி வரும் புவி அரசியலையும் திறமையுடன் சமாளித்து வருகிறார்.

இந்தச் சூழலில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையை கையில் எடுக்கும்படி பிரதமர் மோடியை என் போன்றவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில், புவிஅரசியலில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடயமாக இருப்பார்கள் என்பதை பிரதமர் மோடி உணர்கிறார். எனவேதான், பல்வேறு உத்திகளை பிரதமர் மோடி வகுத்துள்ளார். அவற்றை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. ஐஎப்எஸ் அதிகாரியாக இருந்த காலம் முதல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை ஜெய்சங்கர் நன்கு அறிந்தவர். அதனால் இந்த பணிகளுக்கு ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றுவார்.

  • இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு முடிவுகட்ட உங்களுடைய யோசனை என்ன?

ஆங்கிலேயர் காலம் முதலாகவே இலங்கையில் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவே நடத்தப்பட்டனர். இதை சுதந்திரப் போராட்டக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்த மகாத்மா காந்தியும், நேருவும் கூட உணர்ந்தனர். எனவே, இலங்கை தமிழர்கள் போராட்டம் முதல் நடைபெற்ற தமிழின அழிப்பு, தமிழ்த் தலைவர்கள் படுகொலைகள் உள்ளிட்ட கொடுமைகள் மீதுசர்வதேச அளவில் ஒரு சுதந்திரமான விசாரணை தேவை. முள்ளிவாய்க்கால் சம்பவமும் ஐக்கிய நாடுகள் சபையில் நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறியபொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதிகாரங்கள் இன்றி பொம்மைகளாக இருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு முழு அதிகாரங்கள் வழங்க வேண்டும். இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் காணாமல் போன ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதே முள்ளிவாய்கால் போருக்கு பின் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழர்களது காணி நிலங்களில் 14 வருடங்களாக ராணுவம் அமர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அவசியம் இல்லாத இந்தராணுவத்தை அங்கிருந்து விலக்க வேண்டும்.

தமிழர்களுக்காக இந்திய அரசுஅளித்த நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. தமிழர்களே இல்லாத ராஜபக்சவின் தொகுதியான காழியில் மிகப்பெரிய ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில், பிரதமர் மன்மோகன் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா அந்த ரயில் நிலையத் திறப்புவிழாவுக்கு சென்றிருந்தார். இதுபோன்ற தவறுகளை இந்திய அரசு கணக்கு எடுத்து தம் நிதியை பயனுள்ள வகையில் செலவிட வலியுறுத்த வேண்டும்.

  • பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு கருத்து எழுந்துள்ளதில் உண்மை என்ன?

பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவர்களில் முதலாமவர் நெடுமாறன், அடுத்து நான், பிறகு புலவர் புலமைப் பித்தன். கடந்த 1982-ல் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின்புதான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வெளியில் பரவலாக அறியப்பட்டார்.

ஆனால், அதற்கும் பல வருடங்களுக்கு முன்பே அவரை எங்களுக்கு தெரியும். சென்னையில் பிரபாகரன் மயிலாப்பூர் வீட்டில் என்னுடன்சுமார் ஒரு வருடம் தங்கி இருந்தார். நெடுமாறன் கூறியதன்படி நானும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறேன். இதை ஒரு காலத்தில் மதிமுக தலைவர் வைகோவும் வழிமொழிந்திருந்தார். அவர் எங்கோ உயிருடன் இருக்கிறார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கினால் ஒருநாள் வருவார்.

பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசு கூறும் தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. அவரது உடலின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டதாக வெளியான தகவலும் பொய். ஏனெனில், பிரபாகரன் உறவினர்களில் யாரிடம் இருந்து ரத்தம்எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.

அப்போது, இந்த சோதனைக்கான வசதி இலங்கையில் இல்லை. அதற்காக இலங்கை அரசு இந்தியாவிலும் அதை செய்யவில்லை. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாக குறைந்தது ஒரு வாரமாகும். ஆனால், இவர்கள் 24 நேரத்தில் செய்து கண்டுபிடித்ததாகக் கூறுவதை நம்ப முடிய வில்லை.

  • மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கையில் சிக்கும் மீனவர்களுக்கும் தீர்வு காண முடியாமல் உள்ளதே?

இருதரப்பு மீனவர்கள் இடையே தேவையில்லாத மோதலை இலங்கை அரசு உருவாக்கி வருகிறது. கச்ச தீவை மீட்டால் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர ஒரு வழி பிறக்கும். இது மீட்கப்பட்ட பின் அங்கு காவலுக்கு இருக்கும் இந்திய பாதுகாப்பு படை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பளிக்கும். கச்சத் தீவு அளிக்கப்பட்ட போது முறையாக வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

இதுதொடர்பான மசோதாக்களும் நமது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படவில்லை

நாட்டில் மனித படுகொலைகளுக்கான நீதியைக் கூட  பெறமுடியாது நாம் போராடுகின்றோம் – முன்னாள் தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு  அரசு பொறுப்புச் சொல்வதற்கோ அல்லது நீதிக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கோ தயாரில்லை. இந்நிலையில், சர்வதேசத்தின் தலையீடு காத்திரமாக அயைவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மனிதப் புதைகுழிகளுக்கு நீதிவேண்டி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் பின்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் பின்பாக அப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சியடைவதற்காக பௌத்த சிங்கள பேரினவாதத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பர் என தமிழ் மக்கள் நம்பினர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக என்றாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு அரசு பெறுப்புச் சொல்லும் என்பதுடன் மீள அவ்வாறாக நடைபெறாமையை பொறுப்புச் சொல்வதன் வாயிலாக உறுதிப்படுத்தி நீதி கிட்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலைகள் உரியவாறு உறுதிப்படுத்தப்படாமல் நாட்டில் பொருளாதார ரீதியிலான சீராக்கங்களுடன் சர்வதேச உதவிகளை அரசு பெற்றுக்கொண்டுள்ளது. இதனை தமிழ் மக்கள் பேரிடியாகப் பார்க்கின்றனர். அடிப்படையில் உள்நாட்டில் நீதியில்லை. நியாயமில்லை. இனரீதியிலான படுகொலைகளுக்கு பாரிகாரங்கள் இல்லை என்ற நிலையில் எமது மக்கள் எப்போதும் நியாயபூர்வமான சர்வதேச தலையீட்டை எதிர்பார்க்கின்றனர்.

இன்றும் குருந்தூர் மலையில் எமது வழிபாட்டு உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுளளது.

யுத்தத்தின் போதும் பின்பாகவும் எமது  மக்கள் அரச அனுசரனையுடன் வழிகாட்டுதல்களுடன்தான் அரச படைகளினால் சித்திரவதை செய்யப்பட்டார்கள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறாக இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்றுவரும்  வெளிப்படையான உண்மைகளை கருத்தில் கொண்டு இலங்கையுடனான அரசியல், பொருளாதார, கலாச்சார சமூக ரீதியிலான தொடர்புகளில் சர்வதேசம் பொருத்தமான தலையீடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிக அவசியம் அலி சப்றி

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்குமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்த அமைச்சர், சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றுவதற்காக சர்வதேச மட்டத்தில் பல விரிவுரைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இடைக்கால செயலகம் அமைக்க ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக ஆணைக்குழுவின் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அடித்தளத்தைத் தயார்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக புதன்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் அவசியத்தையும் அதனை ஸ்தாபிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் விளக்கிய அமைச்சர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பாரிய சேதங்களை சந்திக்க நேரிட்டது என்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் முன்வைத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் பொறிமுறைகளை ஆராய்ந்து இலங்கைக்குப் பொருத்தமான பொறிமுறையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் நாடு மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே சமூகத்தை தெளிவுபடுத்தி இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவைப் பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

சுதந்திரம் பெற்று 20 வருடங்கள் நிறைவடையும் போது நல்லிணக்கத்தின் ஊடாக சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியுள்ளதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அசங்க குணவன்ச தெரிவித்தார்.

இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிகஅவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் துரதிர்ஷ்டவசமான யுகம் மீண்டும் ஏற்படாத சூழலை உருவாக்க முடியும் என சுட்டிக்காட்டிய அசங்க குணவன்ச, உள்நாட்டில் வெற்றிகரமான மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொறிமுறையை உருவாக்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காகவே இடைக்கால செயலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சட்டம் ,கொள்கைப் பிரிவு மற்றும் மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய வண.தம்பர அமில தேரர், கடந்த தேர்தலில் மதவாதமும், இனவாதமும் பாரியளவில் தலைதூக்கியதால், அந்த அனுபவத்தை மக்கள் மறக்க முன் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுத்தார்.

ஜனாதிபதி தற்போது துணிச்சலான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறே மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாதிருக்க தேவையான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தம்பர அமில தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு வழங்கப்படல் வேண்டும் – ஜனா எம்.பி

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்னிலங்கையில் சரத் வீரசேகர, உதயகம்பன்பில, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்தத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை,

மாகாணசபை முறைமையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தினை முழுமையான அமுல்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய செயற்பாட்டினை முன்கொண்டு செல்ல முடியும்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் செயற்படுவோம்.

அவர்களின் குரல்களுக்கு நாங்களும் மதிப்பளித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்.
இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை நாங்கள் விரும்புகின்றோம் என்ற வகையில் இந்திய பிரதமர் தனது பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் அனைத்து கட்சியினரையும் அழைத்து ஜனாதிபதி மகாநாடு ஒன்றை நடாத்தியுள்ளார். அதன் ஊடாக அமைச்சரவை உபகுழுவினை நியமித்துள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.