ஜே.வி.பி யினரிடம் நாட்டை முன்னேற்றும் கொள்ளை எதுவும் இல்லை – மஹிந்தானந்த

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு வாக்களிக்கும் அளவிற்கு நாட்டு மக்கள் மூடர்கள் அல்ல,  ராஜபக்ஷர்களையும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும்  விமர்சிப்பதை தவிர மக்கள் விடுதலை முன்னணியினரிடம்  நாட்டை முன்னேற்றும் கொள்கை திட்டங்கள் எதுவும் கிடையாது  என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலபிடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 25) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பல்வேறு காரணிகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. எமது அரசாங்கம்  சிறந்த நோக்கத்துடன் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தம்மால் தீர்வு காண முடியும் என தற்போது வீர வசனம் பேசும் மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை ஏற்கவில்லை.இக்கட்டான சூழ்நிலையில்  சவால்களை ஏற்பது தான் சிறந்த தலைமைத்துவம்.

ஒரு கூட்டத்தை மக்கள் விடுதலை முன்னிணியினர் நடத்தினால் அதில் ஒரு பகுதி ராஜபக்ஷர்களை விமர்சிப்பதும்,பிறிதொரு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும் பிரதானமாக காணப்படும் .விமர்சனங்களை தவிர பொருளாதாரத்தை முன்னேற்றும் எவ்வித கொள்கை திட்டம் மக்கள் விடுதலை முன்னணியினரிடம் கிடையாது.

விமர்சனங்களினால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது. மக்கள் விடுதலை முன்னணியினருக்கு வாக்களிக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல, எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஆட்சியை நாங்கள் நிச்சயம் கைப்பற்றுவோம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு இல்லை கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.

Posted in Uncategorized

தீர்வு விடயங்களில் கருத்தாட சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை – தமிழ் மக்களே அதைப் பற்றித் தீர்மானிப்பார்கள் – ரெலோ

தீர்வு விடயங்களில் கருத்தாட சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை தமிழ் மக்களே அதைப் பற்றித் தீர்மானிப்பார்கள்

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அது பற்றி முடிவுகளை அறிவிக்க சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் ஒரு நாட்டினுடைய பிரதிநிதியோ அல்லது ஒரு ராஜதந்திரியோ அல்ல. அவருக்கு இட்ட பணியை அவர் செய்வதே சாலச் சிறந்ததாகும். அதை விடுத்து தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தமான விடையங்களில் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது.

இன்றைய அரசியல் சூழலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன? எந்த நாட்டினுடைய பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்? யாருடைய தூண்டுதலில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் பற்றி கருத்து கூற முற்படுகிறார்? அல்லது யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார்? என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பாரா?

மேலும் அவருடைய ஆலோசனையோ தலையீட்டையோ கருத்துக்களையோ தமிழ்த் தலைவர்கள் யாரும் கோரவில்லை. யுத்தம் முடிவடைந்த பின் இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் நீதி, மனித உரிமை, நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்கதையாகி பல சிரமங்களை எதிர்கொண்ட பொழுது இப்போது கருத்துச் சொல்பவர்கள் எங்கு சென்றார்கள்?

ஒருமித்த நிலையில் தமிழ் தலைவர்கள் பயணிக்காமல் தனித்தோட முயற்சி செய்வதாலேயே இப்படியான கருத்துக்களை சிலர் சொல்வதும் தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளி விடுவதுமாக வரலாறு கடந்திருக்கிறது.

காலம் காலமாக புரையோடிப் போன தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எப்படியாக முன் நகர்த்த வேண்டும் என்பதில் தமிழ் தலைவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியுள்ளனர். ஆகவே எரிக் சொல்ஹம் அவர்கள் தன்னுடைய உத்தியோபூர்வமான பணி எதுவோ அதைச் செவ்வனே செய்யுமாறு கோருகிறோம்.

கு. சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் ஜனவரி ஆரம்பத்தில் சந்திப்பு – மாவை சேனாதிராஜா

தமிழ்த்தேசிய பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஜனவரி இரண்டாம் வாரம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக தமிழ்த்தேசியக் கட்சிகள் எத்தகைய விடையத்தை கலந்துரையாடவுள்ளோம் என்பதை கொழும்பில் ஆராயவுள்ளோம் என இலங்கை தமிழரச்சுக் கட்சி தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

ஐனாதிபதி மற்றும் தமிழ்தேசிய கட்சிகளுடனான சந்திப்பு  தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் பிளவு பட்டு தனித் தனியா கட்சிகள் போட்டியிடுவதன் மூலம் எங்களின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்காக அரசாங்கத்துடன் போச்சு வார்த்தை ஆரம்பித்திருக்கின்ற நேரத்தில் தேர்தல் எவ்வாறு எத்தகைய முறையில் நடைபெறப்போகின்றது என்பது தெரியாத நிலையில் நாங்கள் விவாதத்திற்கு அனுமதிப்பது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மத்தியில் பிளவை, குழப்பத்தை ,பலவீனத்தை ஏற்படுத்திவிடும்.

மேலும், ஜனாதிபதியுடன் ஜனவரி மாதம் 10 ,11, 12 ஆம் திகதிகளில் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவது தொடர்பில் திகதிகள் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தமிழ்த்தேசியம் தொடர்பில் செயற்பட்டுவருகின்ற கட்சிகள் ஒன்றிணைந்து குறித்த விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடிவருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக ஜனவரி 7, 8 ஆம் திகதிகளில் கொழும்பி கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயவுள்ளோம் என்றார்.

இலங்கையில் 11 மாதங்களில் 3,596 ஆட்கடத்தல் சம்பவங்கள்!

பல்வேறு காரணங்களுக்காக இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 3,596 ஆட்கடத்தல் சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளமையை  பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு 835 சம்பவங்களே இடம்பெற்றன ஆனால் இந்த வருடத்தின்முதல் 11 மாதங்களில் 3596 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன- கடத்தல் சம்பவங்கள் அச்சம் தரும் விதத்தில் பெருமளவு அதிகரித்துள்ளதை  இது வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிக்கெதிரான தடை- இலங்கையால் எதுவும் செய்ய முடியாது – அலி சப்றி

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் கீத் நொயர் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மேஜர் பிரபாத் புலத்வத்தைக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மோர்னிங்கிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சுயாதீனமான நடவடிக்கை இலங்கை அரசாங்கம் கரிசனைகளை வெளியிடும் ஆனால் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்காது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது சுயாதீனமான செயற்பாடு அவர்கள் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான சுயாதீன வழிமுறைகளை கொண்டுள்ளனர்.இது தொடர்பில் நாங்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் கரிசனைகளை வெளியிடுவோம் ஆனால் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்கமாட்டோம், என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் நாங்கள் தொடர்ந்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம் ஆனால் எங்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் தலைமைகளுடன் விரைவில் அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை – திஸ்ஸ விதாரண

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றதை போன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமற்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொண்டேன்.

பாராளுமன்றம் மற்றும் பொது இடங்களில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து கருத்துரைக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

ஐக்கிய நாட்டுக்குள் பிளவுப்படாத வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம்.

இரண்டு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஆனால் அவர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் அவரால் பதவி வகிக்க முடியாமல் போனது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பதை நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது. இவரது செயற்பாடுகள் எதிர்காலங்களில் இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்,அதற்கு ஆதரவு வழங்குவோம் என்றார்.

ரணிலுக்கு வெகுவிரைவில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி அதிகரிப்பு பொருளாதார கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் பாடம் கற்பித்தார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.

ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இனிதும பகுதியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்த மக்கள் தற்போது உண்மையான அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துள்ளமை வரவேற்கத்தக்கது.

நாட்டுக்கும், தமக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள்.

ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளினால் நாட்டை முன்னேற்ற முடியாது,அரசியல்வாதிகள் மாத்திரம் தான் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். இவர் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை,கடன் செலுத்தாமல் அந்த நிதியை கொண்டு எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஏப்ரல் 12ஆம் திகதி செலுத்த வேண்டிய அரசமுறை கடன்களை செலுத்த போவதில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

8 சதவீதமாக இருந்த பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதால் பொருள் மற்றும் சேவைகளின் கட்டணம் சடுதியாக உயர்வடைந்தது.சமூக பாதுகாப்பு அறவீட்டுதொகை என்ற புதிய வரி அதிகரிக்கப்பட்டு மக்களிடமிருந்த நிதி சூறையாடப்பட்டது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளிறுகிறார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 400 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

நாட்டின் வங்கி கட்டமைப்பின் பிரதான நிலை தரப்பினர்களில் 50 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இதுவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி கொள்கையின் பெறுபேறு.

மறுபுறம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் தக்க பாடம் கற்பித்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், டெலிகொம் நிறுவனம் மற்றும் லிட்ரோ நிறுவனம் உட்பட இலாபம் பெறும் நிறுவனங்களை விற்பனை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதுவே ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது.அரச நிதியை கொள்ளை அடிப்பது ராஜபக்ஷர்களின் கொள்கை, அரச வளங்களை விற்பனை செய்வதும், மோசடியாளர்களுடன் டீல் வைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்தால் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணைக்கு முரணாக அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். தேர்தலை நடத்தினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு அரச வரபிரசாதம், பாதுகாப்பு வழங்குவதை தவிர்த்துக் கொண்டு அந்த நிதியை கொண்டு தேர்தலை நடத்தலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் அதன் விளைவு எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார் என்றார்.

ஆழிப் பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

உலகை உலுக்கிய  அனர்த்தங்களில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் பேசப்படுகிறது. சுனாமி பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்த மக்களும் ஏனைய உயிர்களும் இன்று வரை நினைவுகூரப்பட்டு வருகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் உயிரிழப்புகள் மட்டுமன்றி, பல்வேறு பிரதேசங்கள் மற்றும் உடைமைகளும் அழிந்துபோன தடயங்களை தற்போதும் காண முடிகிறது.

பல இலட்சம் பேரை கடலலை காவு கொண்ட அந்த சோக நாளினையும், அதில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூரும் தினமானது இன்று திங்கட்கிழமை (டிச. 26) நாட்டின் பல பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழகம்

ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில்  இன்று திங்கட்கிழமை (டிச 26) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. சுனாமி பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு  அகவணக்கம் செலுத்தி   ஈகை சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமராட்சி உடுத்துறை

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு , தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004 டிசம்பர் 26 அன்று சுனாமி அனர்த்தத்தால் காணாமல்போய், பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தைக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.

இதனால் அபிலாஷ் அன்றிலிருந்து ‘சுனாமி பேபி’ என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

மட்டக்களப்பு 

பின்னர், மரபணு பரிசோதனை மூலம் அந்த குழந்தை மட்டக்களப்பு குருக்கள் மடத்தை சேர்ந்த ஜெயராசா தம்பதியின் மகன் என்பது உறுதிப்படுத்தப்பட்டு, பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தற்போது அபிலாஷுக்கு 18 வயது. அவரது இல்லத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அபிலாஷ் இன்று தனது பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் நடந்தேறின.

இதில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மத தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட செயலகம்

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம்   தேசிய பாதுகாப்பு தினமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, அனர்த்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்  நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரீ.ஏ.சூரியராஜா, மதத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முல்லைத்தீவு

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திலும், முல்லைத்தீவு கள்ளப்பாடு மைதானத்திலும், புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்திலும், கள்ளப்பாடு பாடசாலையிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறியழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மத தலைவர்கள் உள்ளிட்டவர்களும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற ஆழிப்பேரலை (சுனாமி) பேரனர்த்தத்தில் முல்லைத்தீவில் மாத்திரம் 3352 பேர் காவு கொள்ளப்பட்டது. மேலும், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனதுடன் உடைமைகள், வாழ்விடங்கள் என்பனவும் அழிந்தன.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த ஒரு தொகுதி உறவுகளின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று (டிச. 26) காலை நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு

ஆழிப்பேரலை சுனாமி தாக்கம் ஏற்பட்டு 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

சுமார் 1800 பேர் பலியான திருச்செந்தூர், நாவலடி, டச்பார் போன்ற கரையோர பிரதேசங்களில் உள்ள சுனாமி நினைவுத்தூபிகளில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களது உறவினர்கள் கதறியழுது மலரஞ்சலி செலுத்தினர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு, அம்பாறை மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கிண்ணியா 

கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுனாமி நினைவுதினமானது கிண்ணியா கடற்கரையில் உள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த 2004 ‍டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும், பிரார்த்தனையும் இடம்பெற்றது.

வாழைச்சேனை 

சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் உயிர் நீத்த உறவுகளின் 18ஆவது நினைவஞ்சலியும், ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளும் இன்று பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.

பாசிக்குடா வலம்புரி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மௌன இறைவணக்கம், நினைவுச் சுடர் ஏற்றல், மத வழிபாடுகள்,  அன்னதானம் ஆகியன இடம்பெற்றதோடு, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேசத்தில் சுனாமி பேரலையினால் 512 பேர் உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு இருவர் உயிரிழந்துள்ளதுடன்  மூவர் காயமடைந்துள்ளனர்.

மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் மேற்கு கரையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளின் விண்ணப்பங்கள் வியாழனன்று பரிசீலனை

21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட  மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள  அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம்  மிக விரைவில் எடுக்கப்படவுள்ளது.

இதற்காக  எதிர்வரும் வியாழக்கிழமை  அரசியலமைப்பு பேரவை  கூடவுள்ளதாக அறிய முடிகின்றது.

அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதித்துவம்  தொடர்பில்  112  பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நவம்பர் 28ம்  திகதியுடன் முடிவடைந்தது.

எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், சிறந்த மற்றும் நேர்மையானவர்கள், பொது அல்லது தொழில் வாழ்க்கையில் நற்பெயரைப் பெற்றவர்கள்  குறித்த பேரவை உறுப்பினர் பதவிக்கு  விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக கருதப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பொருத்தமான மூவரை தெரிவு செய்வது  தொடர்பில் விண்ணப்பங்கள் வியாழனன்று பரிசீலிகப்படவுள்ளதாக அறிய முடிகின்ரது.

அதன் பின்னர் அவ்வாறு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் உடனடியாக பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.