நாய் மீதான துஷ்பிரயோகம் – விசாரணையை கோரும் பீட்டா (PETA) அமைப்பு

ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்தமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டாPeople for the Ethical Treatment of Animals (PETA) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம், அவ்வாறான விடயம் இடம்பெற்றது உண்மை என்றால் இலங்கையின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கவேண்டு;ம் என பீட்டாவின் ஈவிரக்கமற்ற செயல் குறித்த விசாரணை பிரிவின் சிரேஸ்ட துணை தலைவர் டப்னா நச்சிவினோமிச்  தெரிவித்துள்ளார்.

விலங்குகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் பின்னர் மனிதர்களிற்கு எதிராக அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அனேகமாக இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.

இந்த வீடியோ வெளியான சில மணிநேரத்தில்  ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தனிப்பட்ட காரணங்களிற்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த விடயங்களை செய்தியாளர் மாநாட்டில் அம்பலப்படுத்திய ஹிருணிகா பிரேமசந்திர ஆதர்ச கரந்தனா என்ற பெண்ணிண் செல்லப்பிராணிக்கே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அந்த பெண் முகநூல் ஊடாக சந்தித்த பின்னர் மாரசிங்கவின் காதலியாக மாறி அவருடன் இரண்டு வருடம் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக தெரிவித்தார்.

நாயின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த பின்னர் இரகசியமாக இந்த விடயத்தை பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

ஜனவரி 31 இனுள் பயங்கரவாதச் சட்டம் இரத்து – விஜயதாஸ ராஜபக்‌ஷ

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

தென்கொரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரிக்கு அமைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (டிச. 23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்வது காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது என்பதால் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்ற ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சட்டமாதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே,ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திர திஸ்ஸ ஆகியோரின் இணை தலைமைத்துவத்தில் தேசிய பாதுகாப்பு சட்டமூல உருவாக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க  எதிர்பார்த்துள்ளேன்.

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கும் வகையில் உண்மையை கண்டறியும் நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை போன்று ஒரு விசேட ஆணைக்குழுவை உருவாக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர்,ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் உறுதியளித்துள்ளார்கள்.ஐக்கிய நாடுகள் சபையின் கோட்பாடுகளுக்கு அமைய நாட்டில் நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்படும் என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்யுமாறு நாடளாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் நாளாந்தம் வலுப்பெற்ற நிலையில் உள்ளது என்றார்.

ஆணைக்குழு தேர்தல் திகதியை உறுதிப்படுத்தாவிடின் நீதிமன்றத்தை நாடுவோம் – பவ்ரல்

ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டிய தேவை சட்ட ரீதியில் வெளிப்பட்டு இருக்கின்றது. என்றாலும் இந்த தேர்தலை பிற்போடுவதற்காக பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் தற்போதுவரைக்கும் கையாளப்பட்டு வருகின்றன. எந்த நிலைமையிலும் சரி தேர்தலை நடத்தியாகவேண்டி இருக்கின்றது. இது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நேரடி தீர்வாக இல்லாவிட்டாலும் ஜனநாயக வரைப்புக்குள் உரிய காலத்துக்கு சட்ட ரீதியில் தேர்தலை நடத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

அத்துடன் சட்டத்தின் பிரகாரம் 2023 மார்ச் 19ஆம் திகதி ஆகும்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, நியமிக்கப்படவேண்டும். அதனால் அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் அறிவிக்கப்படாவிட்டால் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இதேவேளை, தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாட அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நேற்று கொழும்புக்கு அழைத்திருப்பதாக தெரியவருகின்றது.

இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் ருமேனியாவில் கைது

இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 27 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் ஹங்கேரிக்குள் இரகசியமாக நுழைய முயன்ற டிரக்கொன்றை கைப்பற்றியுள்ளதாக ருமேனியாவின் எல்லை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

துணிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஏற்றப்பட்ட டிரக்குகளில் மறைந்திருந்தவாறு ஹங்கேரிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நட்லாக் எல்லைபகுதியில் எல்லையை கடக்க முயன்ற டிரக்கை ருமேனிய அதிகாரிகள் சோதனையிட்டவேளை உள்ளே 16 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட டிரக் ஆடைகளை கொண்டு செல்கின்றது என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததுஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 வெளிநாட்டவர்கள் மறைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றிற்குள் காணப்பட்டனர் சோதனைகளிற்கு பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் – அவர்கள் பங்களாதேஸ் எரித்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 21 முதல் 67 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நட்லாக் எல்லையில் ருமேனிய பிரஜையொருவர் செலுத்திய வாகனத்தை சோதனையிட்டவேளை இலங்கை பாக்கிஸ்தானை சேர்ந்த 21 வயது முதல் 42 வயதுடைய 11குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

நீதித்துறை மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜப்பான் தூதுவர் நீதி அமைச்சரிடம் உறுதி

இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு மற்றும் தொழிநுட்பம் உட்பட தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுப்பேன் என ஜப்பான் தூதுவர் ஹிதைக்கி மிசுகாேஷி தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் மற்றும் ஜப்பான் தூதுவர் ஹிதைக்கி மிசுகாேஷி  ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் இடம்பெறவேண்டிய இன நல்லிணக்க செயற்பாடுகள்,  சட்டக்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் அதில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சட்ட கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளுக்காக தங்களின் அனுபவம் மற்றும் தொழிநுட்பம் உட்பட தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க தொடர்ந்து அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுப்பதாக இதன்போது தெரிவித்த ஜப்பான் தூதுவர், நீதி அமைச்சர் என்றவகையில், அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கும் விசேட ஒத்துழைப்புகளுடன் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், தேசத்தின் மற்றும் இந்த நாட்டின் தேவைகளை உணர்ந்து, அதுதொடர்பில் செயற்படுவது தொடர்பில் ஜப்பான் நாடு மகிழ்ச்சியடைகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை திசை திருப்புவதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நீண்டகாலமாக ஜப்பான் இலங்கையுடன் மேற்கொண்ட நற்புறவு  மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

ஜப்பான் அரசாங்கம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலை போன்ற மிகவும் பெறுமதிவாய்ந்த பல வேலைத்திட்டங்களை எமது நாட்டுக்கு வழங்கியமை தொடர்பில் விசேட நன்றியை தெரிவித்திருந்தார்.

அத்துடன் நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய அமைச்சர், நட்டஈட்டு வழங்கும் காரியாலயம், காணாமல் போனோர் தொடர்பில் முறையிடும் காரியாலயம் மற்றும் தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான காரியாலயம் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பாக இதன்போது அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் 16 பேரின் வழக்குகளை விரைவுபடுத்த பரிந்துரை – நீதியமைச்சர் விஜயதாஸ

பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள்.

16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் வெள்ளிக்கிழமை (23) இடம் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் விடுதலை புலிகள் போராளிகள் சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் உள்ள 8 விடுதலைப் புலிகள் போராளிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இவர்களின் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து,அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தலதா மாளிகை, மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த போது அவரையும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளார்கள்.இவர்களை விடுதலை செய்வதாயின் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து ஆலோசனை கோரப்பட வேண்டும்.இவ்விடயம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் வயது முதிர்ந்தோர்,நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தகவல்களும் தற்போது கோரப்பட்டுள்ளன.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைக்கு அமைய வயது முதிர்ந்தோர் மற்றும் கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

சம்பந்தனின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலத்தை பலவீனப்படுத்துகிறது- ரெலோ சபா குகதாஸ்

சிங்கள பேரினவாத அரசாங்கம் மிகவும் பலவீனம் அடைந்து சர்வதேச உதவிகள் தடைப்பட்டு அதனை பெற்றுக் கொள்ள தமிழர் தரப்பை எப்படி கையாள முடியும் என்று பலவிதமான  அனுதாப அறிக்கைகளை ஆட்சித் தரப்பு தமிழர்கள் மீது வெளிப்படுத்தும் சூழ்நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கை தமிழர்களின் பேரம் பேசும் பலத்தை பலவீனப் படுத்துவதாகவே உள்ளது என மக்கள் ஆதங்கப்படுகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் தேசிய தலைமைகள் இணைந்து ரணிலின் அழைப்பில்  கடந்த 13 திகதி சந்தித்த போது கொடுத்த  கோரிக்கைகளை நிறைவேற்ற ஐனவரி 31 திகதி வரை காலக்கெடு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர் அதற்கான நல்லெண்ண வெளிப்பாடு முறைப்படி அரசாங்கத்தால் கிடைப்பதற்கு முன்பாக தாங்களாக வலிந்து சந்திக்க சம்பந்தன் சுமந்திரன் சென்றமை ரணில் அரசாங்கத்தை காப்பாற்றி தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதாகவே உள்ளது.
தமிழர் தரப்பு  இந்தியாவின் மேற்பார்வையில் இனப்பிரச்சினைக்கான  தீர்வினை முன்னெடுக்க வேண்டும் என உறுதியாக இருப்பதை ரணில் அரசாங்கம் விரும்பவில்லை காரணம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்று நாடகத்தை கடந்த காலங்கள் போல நிகழ்த்த முடியாது இதனால் எரிச்சொல்ஹெம் ஊடாக உள் நாட்டுக்குள் அரசாங்கத்துடன் பேசி தீர்வு காண்பது தான் உறுதியான தீர்வு என  சம்பந்தன் சுமநதிரன் ஊடாக டீலினை முன்னகர்த்தி சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்திக்க வைத்தார் ஆனால்   இந்த சந்திப்பை ஏனைய தமிழ்க் கட்சிகள் நிராகரித்து ரணிலுக்கு கடிதம் எழுதியமையால்  ஐனாதிபதி செயலகம் இந்த சந்திப்பு உத்தியோக  பூர்வமானது இல்லை என அறிவித்துள்ளது
ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழர் தரப்பையும் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலத்தையும் பலவீனப்படுத்துவதாகவே அமையும் மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறலில் இருந்தும் தீர்வு வழங்குவதில் இருந்தும் கடந்த காலங்களைப் போல தப்பிக்க வழி திறக்கும்  எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசுக்கு வருமானம் போதாது – நிதி அமைச்சு செயலாளர்

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கும் சமூக நலனை பேணுவதற்கும் அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் இன்று (23) நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் வருமானத்தை அதிகரித்தது போன்று செலவைக் குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் – யாழ்ப்பாணம் படகு சேவை தொடங்குவதில் தாமதம்

புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு படகு சேவை அடுத்தமாதம் தொடங்காது. சோதனை நிலையப் பணிகள் நடப்பதால் இரு மாதங்களாகும். மூன்றரை முதல் நான்கு மணி நேர பயணத்துக்கு 5 ஆயிரம் இந்திய ரூபா கட்டணமாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்தில் இந்தியர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு யாழ்ப்பாணத்திற்கு பயணியர் படகு சேவை அடுத்தமாதம் தொடங்கப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதற்கு இந்திய அரசின் ஒப்புதலும் தரப்பட்டுள்ளது.

வரும் ஜனவரியில் படகு போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதா என்று துறைமுகத் துறை செயலர் ஜவகரிடம் கேட்டதற்கு, “படகு போக்கு வரத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தந்துள்ளது. காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஐந்து நிறுவனங்கள் படகு போக்குவரத்தை நடத்த விண்ணப்பித்தனர். அவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து ஒப்புதலை மத்திய அரசு அளிக்கும். படகு சேவைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணிகள் சோதனை நிலையம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடந்து வருகிறது.

படகு சேவையை ஜனவரியில் தொடங்குவது கடினம். தற்போதைய பணிகள் நிறைவடைய இரு மாதங்களாகும். அதன்பிறகு படகு போக்குவரத்து தேதி இறுதி செய்யப்படும். வர்த்தகம் மட்டுமில்லாமல் சுற்றுலாவுக்கும் உகந்ததாக இச்சேவை இருக்கும். குறிப்பாக காரைக்கால் திருநள்ளாறு கோயில் உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாவும் நன்கு வளர்ச்சி அடையும்” என்று குறிப்பிட்டார்.

படகு போக்குவரத்து தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது,”காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்தை மூன்றரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரத்துக்குள் சென்றடையலாம். பயணக் கட்டணம் ரூ. 5 ஆயிரமாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளனர். படகு சேவையில் 300 முதல் 400 பயணிகள் பயணிக்கலாம். அத்துடன் ஒரு பயணி 100 கிலோ வரை உடமைகளை எடுத்து செல்லலாம்” என்று தெரிவிக்கின்றனர்.

உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என ரணில் விக்கினேஸ்வரனுக்கு அறிவிப்பு

தமிழரசுக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்பு, உத்தியோகபூர்வமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அதில், அரசாங்கத் தரப்பில், பிரதமர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன், சட்டமா அதிபரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பாக, அடுத்த ஜனவரி மாதம், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஓரிரு வாரங்களுள் முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தச் சந்திப்பை பிற்போடுமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு ஏற்கனவே, கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தினால், தமக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே சந்திப்பிற்கான அழைப்பை விடுத்ததாகவும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தம்மால், குறித்த தினத்தில் கொழும்பில் இருக்க முடியாது என்ற காரணத்தால், அந்தச் சந்திப்பை பிரிதொரு தினத்திற்கு பிற்போடுமாறும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமின்றி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கக்கூடிய அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற விடயத்தையும், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, தமிழரசுக் கட்சியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக, ஜனாதிபதி செயலகத்தால், சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், குறித்த சந்திப்பானது, உத்தியோகபூர்வமானதல்ல என்றும், ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பேச்சுவார்த்தைக்குள், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை மத்தியஸ்தராக கொண்டுவர முயற்சிக்கப்படுமாக இருந்தால், இந்திய தர்ப்பில் மத்தியஸ்தர் ஒருவரை அழைத்துவர நேரும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.