தேர்தலை பிற்போடுமாறு ஆணைக்குழுவுக்கு அரசாங்கத்தால் கடும் அழுத்தம் – நாலக கொடஹேவா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது.

தேர்தலை பிற்போட முடியாது. வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு ஆணைக்குழு அரசாங்கத்திடம் அறிவித்து விட்டது. தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில்  வியாழக்கிழமை (டிச. 22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என்பது ஜனாதிபதியின் பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பு எதிர்கொள்ளும் மிக மோசமான பாதிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி  உட்பட  அரசாங்கம் கவனம்  செலுத்தவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு  அரசாங்கம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்து வருவதாக அறிய முடிகிறது. தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலை பிற்போட முடியாது. நடைமுறை சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை பிற்போட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,பொதுஜன பெரமுனவிற்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை உள்ளது,ஏனெனில் இரு  தரப்பினரும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் விடயத்தில் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரும்,பொதுஜன பெரமுனவினரும் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள். ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவது சிறந்தது, பொருளாதார படுகொலையாளிகளுக்கு ஜனநாயக ரீதியில் சரியான பாடம் கற்பிக்க முடியும்.

2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேர்ந்த கதியே தமக்கும் ஏற்படும் என்பதால் பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் பிற்போட பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாட்டு மக்கள் அரசியல் ரீதியான தமது நிலைப்பாட்டை தேர்தல் ஊடாக மாத்திரமே வெளிப்படுத்த முடியும்.மக்களின் அடிப்படை உரிமையை நிச்சயம் பாதுகாப்போம். தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்கமாட்டாது என்றார்.

சஜித் மாத்திரமே மக்கள் மத்தியில் செல்ல முடியும் – இம்ரான்

நமது நாட்டினுடைய நிலமையினையும் அரசினுடைய நிலமையினையும் பார்க்கின்ற போது திருகோணமலை வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணம் வழங்கும் நிகழ்வானது வரலாற்றில் இடம்பிடிக்கப்படவேண்டிய நிகழ்வு எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே இன்று மக்கள் மத்தியில் செல்ல முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

‘சுவாசம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 54 ஆவது கட்டமாக முப்பத்தொன்பது இலட்சம் (3,900,000) ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள்  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் இன்று வியாழக்கிழமை (22)அன்பளிப்புச் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

நாட்டை சிங்கபூராக மாற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வெளியில் வரமுடியாமல் இருக்கிறார்கள். அவர்களால் தேர்தல் காலத்தில் பேசப்பட்ட பேச்சுக்களை பார்க்கின்ற போது நகைப்பாக இருப்பதாகவும் தற்போது எதுவும் செய்ய முடியாமல் ஐனாதிபதி, பிரதமர் பதவிகள் மாற்றி அமைச்சரவையிலும் தொடர்ச்சியான மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் சென்று அவர்களுடைய பிரச்சினைகளை அறிவது மட்டுமல்லாமல் தீர்வுகளையும் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்த அவர் இலங்கை வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியிலான சூழ்நிலையிலும் மக்களுக்கு ஆளும் கட்சியை விட அதிகமாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உதவுவதாக தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இதுவரையில்  48 பாடசாலைகளுக்கு 1602 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்துகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், 22 பாடசாலைகளுக்கு 178 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான தகவல் தொழிநுட்ப கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் இதுவரை 53 வைத்தியசாலைகளுக்கு 2292 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக/நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய  மாணவர் படையணியின் மேம்பாட்டுக்கு சீனா நன்கொடை

தேசிய  மாணவர் படையணியின் மேம்பாட்டு  நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கான சீன தூதரகம் 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக  பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் வழங்கப்பட்டது. சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வான் டொங் இந்த நன்கொடையை வழங்கி வைத்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க சீன தூதரகம் இந்த நன்கொடையை வழங்கியது.

நாட்டிற்கு நல்லொழுக்கமுள்ள இளைஞர்களையும் எதிர்காலத் தலைவர்களையும் உருவாக்கும் நோக்கிலும் தேசிய  மாணவர் படையணியின்  பயிற்சி நடவடிக்கைளை மேலும் மேம்படுத்தும் நோக்குடனும் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் சீன பிரதி பாதுகாப்பு இணைப்பாளர் கேர்ணல் காவோ பின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மோசமான ஆட்சியாளர்களால் நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டுள்ளது – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும்போது இந்த வருடம் நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறி குருச வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (டிச 21) இரவு இடம்பெற்ற ‘நம்பிக்கையின் பிறப்பு’ எனும் நத்தார் கரோல் இசை நிகழ்ச்சியின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் 6.1 மில்லியன் மக்கள் ஒருவேளை உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை நாட்டில் இவ்வளவு அழிவுகளுடன் கொண்டாட முடியாதுள்ளது.

ஆட்சியாளர்களின் மோசமான செயல்களால் நாட்டுக்கு இப்படி நேர்ந்துள்ளது. பிச்சைக்காரர்கள்போல் உணவும் பானமும் கேட்டு உலகம் முழுவதும் செல்கிறார்கள்.

இவ்வளவு அழகான, பசுமையான எமது நாடு உணவு மற்றும் பானங்களுக்காக பிச்சை எடுப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். மோசமான ஆட்சியாளர்களின் செயலால்தான் நாட்டுக்கு இந்த நிலையை நேர்ந்துள்ளது என்றார்.

மன்னார் அம்மாச்சி உணவகத்தை மீள திறக்க நடவடிக்கை

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்மாச்சி என்ற பாரம்பரிய உணவகத்தை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை விவசாய பணிப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளி மாவட்டங்களிலிருந்து மன்னார் பகுதிக்கு வருவோருக்காகவும் மன்னார் மாவட்ட மக்கள் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழவும், 2018ஆம் ஆண்டு முருங்கன் பிரதான வீதியில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் விவசாய திணைக்களத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த உணவகம் திறக்கப்பட்டமையால் பெண்கள் தலைமைத்துவம் கொண்டவர்களும் வறுமை கோட்டில் வாழ்ந்த குடும்ப பெண்களும் வருமானத்தைப் பெற்று வந்தனர்.

அத்துடன் குறித்த உணவகத்தில், குறைந்த விலையில் பாரம்பரிய உணவு வகைகளை பெறக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் – 19 தொற்று நோய் காலப்பகுதியில் இந்த அம்மாச்சி உணவகம் மூடப்பட்டது. இதற்கு பின்னர் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு காணப்படுவதால் இப் பகுதியிலும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரும் பாரம்பரிய உணவுகளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் வினவியபோது, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முருங்கன் பகுதி அம்மாச்சி உணவகம் மீண்டும் இயங்கயுள்ளது.

மேலும், அம்மாச்சி உணவகத்துடன் இணைந்து பயணிப்பதற்கு சமையல் மற்றும் வியாபாரம் செய்வதில் ஆர்வம் உள்ள அமைப்புகளைச் சார்ந்தவர்களும் மற்றும் தனிப்பட்ட பெண்களிடமும் இருந்து விண்ணப்பங்களை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரும்பியோர் முருங்கன் விவசாய போதனாசிரியர் அலுவலகம், 077-2911198 , 076-5459436 பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் உயிலங்குளம் 077-6614703 , 077-6640526 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.

கூட்டத்திற்கு தாமதமாக வந்த இலங்கை அமைச்சரை கடுமையாக சாடிய தென்கொரிய அதிகாரி

பொய்களை சொல்வதும் வாக்குறுதிகளை அளிப்பதும் இலங்கையில் சாதாரணவிடயமாகிவிட்டது அது இலங்கையின் கலாச்சாரமாகிவிட்டது என தென்கொரிய நிறுவனமொன்றின் தலைவர் ஒருவர் கொழும்பில் இன்று ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றிற்கு 30 நிமிடம் தாமதமாக வந்த இராஜாங்க அமைச்சரை தென்கொரியாவை சேர்ந்த அமைப்பொன்றின்South Korea Disaster Relief Foundation தலைவர் கடுமையாக சாடியுள்ளார்.

தென்கொரியாவை சேர்ந்த அமைப்பொன்றின் தலைவரை இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் இன்று சந்திக்க ஏற்பாடாகியிருந்தது எனினும்இராஜாங்க அமைச்சரும் அவரது குழுவினரும் குறிப்பிட்ட சந்திப்பிற்கு அரைமணிநேரம் தாமதமாக சென்றுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு தென்கொரியா எவ்வாறு உதவலாம் என ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கே இலங்கை அதிகாரிகள் தாமதமாக சென்றுள்ளனர்.

இதன் காரணமாக சீற்றமடைந்த தென்கொரிய அமைப்பின் தலைவர் சோ சங் லீ இலங்கை குழுவினரை கடுமையாக சாடியுள்ளார்.

கூட்டமொன்றிற்கு அரை மணித்தியாலம் தாமதமாக செல்வது நல்ல அறிகுறியில்லை அமைச்சர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமு; நிகழ்வுகளிற்கு உரிய நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் இது இடம்பெற்றிருந்தால் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அமைச்சர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அந்த சந்திப்பு உரிய நேரத்தில் ஆரம்பமாகவேண்டும்,அமைச்சர்களால் அதனை செய்ய முடியாவிட்டால் அவர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை எனவும அவர் தெரிவித்துள்ளார்

பொய்களை சொல்வதும் வாக்குறுதிகளை அளிப்பதும் இலங்கையில் சாதாரணவிடயமாகிவிட்டது அது இலங்கையின் கலாச்சாரமாகிவிட்டது என தெரிவித்துள்ள தென்கொரிய அமைப்பின் தலைவர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இதனை தெரிவிப்பதை கேள்விப்பட்டு இலங்கை மக்கள் வெட்கப்படவேண்டும், இலங்கை மக்கள் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர்களால் வெளிநாட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்,அவற்றை நிறைவேற்றுவதை ஒருபோதும் மறக்க கூடாது அமைச்சர்களும் அவ்வாறே செயற்படவேண்டும்,அவ்வாறு செயற்படாத அமைச்சர்களை சந்திப்பதில் அர்த்தமில்லை,மக்கள் பொய்சொல்லக்கூடாது,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச நூலக விழா சிறப்புற நடைபெற்றது

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் நுலகர் திருமதி  கர்சனமாலா உதயகுமாரன் தலைமயில் நேற்று புதன் கிழமை (21) சிறப்புற நடைபெற்றன.

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக    நுலகர் சிவபாக்கியநாதன் கேதீஸ்வரன், சபையின் செயலாளர் இராமலிங்கம் பகீரதன், சோமாஸ்கந்தா கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் புத்தூர் நுலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் புதுவை நாதம் நூலை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வெளியிட்டு வைக்க நூலின் முதற் பிரதியினை சித்த சுதேச வைத்தியர் இளையவன் செல்லத்துரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலுக்கான நயவுரையினை ஆசிரியர் திருமதி கேதீஸ்வரி ஆனந்தரட்ணம் ஆற்றியிருந்தார்.

இத் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதீதிகளின் உரைகள், அரிச்சுவடி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் என பலதரப்பட்ட தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் உள்ளுராட்சி நூலக வாரத்தினை முன்னிட்டு பிரதேச சபையின் நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

பிரதேசத்தில் சிறந்த வீட்டு நூலகத்தினை முகாமை செய்வதற்கான கௌரவம் ப. கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டதுடன்  சிறந்த வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
மேலும், நூலகங்களுக்கு இடையில் தேசிய நூலக மற்றும் சுவடிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுப் போட்டியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகம் நாடாளாவிய ரீதியில் 3 ஆம் இடத்தைப் பெற்றது.

இவ் விருதினை கடந்த வாரம் ஜயவர்த்தன பல்கலைக்கழக துணைவேந்தாரிடம் நூலகர் திருமதி கர்ஞனமாலா உதயகுமாரன் பெற்றுக்கொண்டார். அவ் விருதினை இந் நிகழ்வில் வைத்து பிரதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் சபையில் காட்சிப்படுத்துவதற்காக நூலகரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீனா இந்தியாவின் கடன் உத்தரவாதங்களிற்காக காத்திருக்கின்றோம் – நந்தலால் வீரசிங்க

இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக இலங்கையின் மத்தியவங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

தசாப்த காலங்களில் இல்லாத வகையில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை செப்டம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 பில்லியன் நிதி உதவிக்கான இணக்கப்பாட்டிற்கு வந்தது.

இலங்கை வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை நிறுத்தியதுடன் பல அவசர நடவடிக்கைகளை மேற்கொண்ட பல மாதங்களின் பின்னர் இது இடம்பெற்றது.

எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் உறுதியளிக்கப்பட்ட ஐ.எம்.எப் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளிடமிருந்து உரிய உத்தரவாதங்களை பெறவேண்டும் .

கொழும்பு 2.9 மில்லியன் டொலரை எப்படியாவது பெறவேண்டிய நிலையில் உள்ளது – அது மிகப்பெரிய தொகை என்பதற்காக இல்லை – இலங்கை அந்த நிதி உதவியை வைத்துக்கொண்டு இரண்டு மாதங்களிற்கே இறக்குமதியில் ஈடுபடமுடியும்.

ஆனால் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பயன்படுத்தி சர்வதேச அளவில் மேலும் கடனை பெறுவதற்கு இலங்கை தகுதி பெறக்கூடும்.

இலங்கை பொதுமக்களை பல மாதங்களாக வீதிக்கு தள்ளிய மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளது.

பாரிய ஆர்ப்பாட்டங்கள் ராஜபக்சாக்களை அதிகாரத்திலிருந்து அகற்றின.

நாடாளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப போவதாக உறுதியளித்துள்ளார்.

அதேவேளை இதற்காக கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இலங்கைதனக்கு கடன்வழங்கிய சீனாஜப்பான் இந்தியா ஆகிய நாடுகளுடன் அவர்களிற்கு வழங்கவேண்டிய மில்லியன் டொலர் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

நாங்கள் இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் வெளிப்படையான திறந்த ஒப்பிடக்கூடிய விதத்தில் பரிமாறியுள்ளோம் என இலங்கையின் பிரதான வங்கியின் ஆளுநர் இந்துவிற்கு செவ்வாய்கிழமை வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இனி அவர்கள் இது குறித்து ஆராய்ந்து தங்கள் முடிவுகளை தீர்மானித்த பின்னர் எங்களிற்கு பதிலளிக்கவேண்டும் – விரைவில் அவர்கள் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கி;ன்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் ஆரம்ப கட்ட உடன்படிக்கையை செய்துகொண்ட தருணத்திலிருந்து இலங்கையிடம் கடன் வழங்குபவர்களின் சமத்துவம் மற்றும் வெளிப்படைதன்மையின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது கொழும்பு எந்த கடன் வழங்குநர்களிற்கும் முன்னுரிமை அளிக்க கூடாது எனவும்இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் நிவாரணத்தை இந்த வருட இறுதிக்குள் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை- இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீடிப்பதே இதற்கு காரணம்.

சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் சிறிது தாமதமாகின என தெரிவித்துள்ள இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர்ஒக்டோபரில் இடம்பெற்ற சீன கம்யுனிஸ்ட் கட்சியின் வருடாந்த காங்கிரஸ் கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் தாமதமாகின என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் உடன் உதவி தாமதமாவதற்கு சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் மாத்திரம் காரணமில்லை என குறிப்பிட்டுள்ள அவர்ஜப்பானும் பாரிஸ் கிளப்பும் கடன் மறுசீரமைப்பு குறித்து நன்கு அறிந்துள்ளன பல வருடஙகளாக அவை அந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன இதன் காரணமாக அவை தமது ஈடுபாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன,அவர்கள் இலங்கை நிலையை ஆய்விற்கு உட்படுத்தி பாரிஸ் கிளப்பில் இடம்பெறாத இந்தியா சீனா போன்ற நாடுகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளன இனி கடன் அந்த நாடுகளே இது குறித்து தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளின் உத்தரவாதம் கிடைத்த பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி கிடைப்பதற்கு நான்குமுதல் ஆறு வாரங்களாகும் எனவும் நந்தலால்வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி – ரணில் இடையிலான முறையற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ்க்கட்சிகள் அதிருப்தி சொல்ஹெய்மை இணைத்தால் இந்திய பிரதிநிதியை இணைப்போம் என்றும் எச்சரிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பின் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முறையற்ற சந்திப்புடனான இந்த சந்திப்பிற்கு தமிழர் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த சந்திப்பிற்கு அரச தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை இணைய ஊடகம் ஒன்றிற்கு இது தொடர்பில் அவர் தெரிவித்தார்.

ஏனைய தலைவர்களிற்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல், திடீர் அழைப்பு விடுக்கப்பட்டு, முறையற்ற ஏற்பாட்டுடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலுக்கு ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு, தமிழர் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தம்மால் வர முடியாதென தெரிந்தும் சுமந்திரன் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் அதில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் சார்பிலும் தான் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலாளருக்கும் கடிதம் அனுப்பியதாக க.வி.விக்னேஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

அத்துடன், எரிக் சொல்ஹெய்மை இந்த பேச்சில் இணைக்கும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டால், இந்திய தரப்பிலிருந்து எமது சார்பில் ஒரு பிரதிநிதியை தாம் அழைத்து வருவோம் என க.வி.விக்னேஸ்வரன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தமிழ் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, வரும் ஜனவரி 5ஆம் திகதி பேச்சை நடத்த ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது

கடன் வழங்குநர்களுடான பேச்சுவார்த்தையில் குழப்ப நிலை. IMF கடனுதவி மேலும் தாமதமாகும் – செஹான்

நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான சர்வதேச பேச்சுவார்த்தைகளின் குழப்பமான நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் எக்கனமி நெக்ஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.

2022 முடிவடைவதற்கு முன்னர் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்கலாம் என இலங்கை அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர் அதன் பின்னர் ஜனவரியில் கிடைக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

இலங்கை சர்வதேச சந்தையில் டொலர் கொள்வனவில் ஈடுபடுவதற்கு அதற்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும் காலம் அவசியமானது.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டிற்கு முன்னர் இந்த நிதியுதவியை பெறுவதற்காக எங்களால் முடிந்தளவு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்கதெரிவித்துள்ளார்

அரசாங்க தரப்பிலிருந்து எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடனான பேச்சுவார்த்தைகள் இழுபடுவதால் இந்த தாமதம் இது குழப்பமான செயற்பாடு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்தைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் அவர்கள் மேலும் சில தெளிவுபடுத்தல்களை கோரியுள்ளனர், நாங்கள் நிச்சயமாக கடன்வழங்குநர்களின் அங்கீகாரத்தை பெறுவோம் ஆனால் எப்போது என்பது தெரியாது என செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன்வழங்கிய தரப்புகள் கடன் மறுசீரமைப்பு குறித்து எங்களிற்கு எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எங்களிற்கு உதவ தயார் என பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது ஆனால் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.